முதல்வர் கருணாநிதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
திகதி: 23.07.2010 // தமிழீழம்
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

இது பற்றி தெரியவருவதாவது:

நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார்.

அந்த நபர் கூறுகையில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.

இதேபோல 108 அம்புலன்ஸ் சேவை மையத்தையும் தொடர்பு கொண்டு இதேபோல கூறியுள்ளார். இதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டனர். விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் வீட்டில் எங்குமே குண்டு சிக்கவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது. இந்த மிரட்டலை விடுத்த நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கையில் இறங்கினர்.

மிரட்டல் வந்த இரண்டு தொலைபேசி எண்களை வைத்து பொலிஸார் விசாரித்தபோது ஒரு முகவரி அரும்பாக்கத்திலும், இன்னொரு முகவரி தாம்பரத்திலும் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபர் சிக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.