குலுங்கிய நியூசிலாந்து.. 6.8 ஆக பதிவு.. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்!
நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். நியூசிலாந்தின் தெற்கு தீவில் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதலில் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக கூறிய தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் பின்னர் அதனை மறுத்தது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் கூறியது. எனினும் இந்த நிலநடுக்கத்தினை உணர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென வீடுகள் குலுங்கியதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன என்றும், இதனால் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் கூறினர். பறவைகள் கத்தியதாகவும் சிலர் தெரிவித்தனர். நியூசிலாந்தின் தெற்கு தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஏற்கனவே நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.