கிழக்கு மாகாண ரயில் சேவைகள் 22 நாட்களுக்குப் பின் மீண்டும் ஆரம்பம்!
23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை!
இயற்கை அனர்த்தத்தினால் கடுமையாக சேதமடைந்த கிழக்கு ரயில் பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டு, இன்று (20) முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலை 7:00 மணிக்கு திருகோணமலையில் இருந்து புறப்பட்ட ரயில், கல் ஓயா மற்றும் மாகோ ஊடாக கொழும்பு கோட்டையைச் சென்றடையும்.
கடந்த மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு ரயில் பாதையின் பல இடங்கள் சேதமடைந்தன.
இதனால் கடந்த 22 நாட்களாக பயணிகள் ரயில் உட்பட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
திணைக்களத்தின் துரித நடவடிக்கையினால் 22 நாட்களுக்குள் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு, இன்று முதல் தினசரி ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னரே, திருகோணமலையில் இருந்து சீனக்குடா துறைமுகத்திலுள்ள பிரிமா (Prima) நிறுவனத்தின் மாவுப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் இயங்கத் தொடங்கியிருந்தன. தற்போது பயணிகள் சேவையும் இணைந்திருப்பதால் கிழக்கு மாகாண ரயில் போக்குவரத்து முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.
23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை!
'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று முற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் ஆரம்ப பயணத்தை குறிக்கும் வகையில், இன்று காலை 8.00 மணிக்கு 'Class S14' வலுச்சக்தி தொகுதியைக் கொண்ட பதுளை - அம்பேவெல விசேட 'உடரட்ட மெனிகே' ரயில் தனது பயணத்தை ஆரம்பித்தது.
'டித்வா' அனர்த்தம் ஏற்பட்டு 23 நாட்களுக்குப் பின்னரே மலையக பாதையில் இவ்வாறான ஒரு ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
இதன்படி, இன்று முதல் மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை - அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


