இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி மறுத்துள்ள ஈரான்!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க நினைக்கும் சரக்கு கப்பல்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்களை ஈரான் மறுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில், டுபாயிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி, முதல்கட்டமாக இந்திய கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரு சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், இந்திய எண்ணெய்க் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மையல்ல என்று ஈரான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக, இந்திய கேப்டன் இயக்கிய லைபீரியக் கொடியுடன் வந்த எண்ணெய்க் கப்பல், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மும்பை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.
ஈரான் போர்த் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்குள் வந்த முதல் சரக்கு கப்பல் இதுவாகும்.
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க நினைக்கும் சரக்கு கப்பல்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில், அந்த கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


