கனடா காவல்துறையினாின் தவறான கணிப்பால் யாழ். இளைஞன் பலி!
காவல்துறையினா் வழங்கிய தவறான தகவலின் காரணமாக அவசர சிகிச்சை தாமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
கனடாவின் பிரம்டன் (Brampton )நகரில் காவல்துறையினரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ். பலாலியைச் சேர்ந்ததும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி (30) என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீர் மூளை இரத்தக்கசிவு காரணமாக அவர் நிலைகுலைந்து விழுந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பீல் பிராந்திய காவல்துறை (Peel Regional Police) அதிகாரிகள், அவரது உடல்நிலையை சரியாக பரிசோதிக்காமல், அவர் மதுபோதையில் உள்ளார் என தவறாக கருதியுள்ளனர். இதனால், அவருக்கு உடனடி முதலுதவி வழங்கப்படாமல், பொது இடத்தில் மதுபோதையில் இருந்ததாகக் கூறி அபராத சீட்டு வழங்கிய பின்னரே நோயாளா் காவு வண்டியை அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், காவல்துறையினா் வழங்கிய தவறான தகவலின் காரணமாக அவசர சிகிச்சை தாமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில், அவரது உடலில் மது எதுவும் இல்லையெனவும், மூளை இரத்தக்கசிவே மயக்கத்திற்குக் காரணம் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மரணத்திற்கு முன்பே தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் இணங்கியிருந்ததால், தற்போது ஆறு பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சமீபத்தில் கனடியப் பிரஜாவுரிமை பெற்றிருந்ததால், கடவுச்சீட்டு இல்லாமை காரணமாக அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலும், தாயாரை கனடாவிற்கு அழைப்பதிலும் சட்ட சிக்கல்கள் உருவாகியுள்ளன.
Patrick Brown மற்றும் Nishan Duraiappah ஆகியோர் தலைமையிலான நிர்வாகம் இதற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என நண்பர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.


