நோர்மண்டி தரையிறக்கத்தின் 82-வது நினைவு தினம்!
உலகின் தலையெழுத்தை மாற்றிய 'டி-டே' (D-Day) - இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டிய வரலாறு!
நோர்மண்டி தரையிறக்கத்தின் 82-வது (06.06.2026) நினைவு தினம்: உலகின் தலையெழுத்தை மாற்றிய 'டி-டே' (D-Day) - இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டிய வரலாறு!
நவீன தொழில்நுட்பங்களும், செயற்கை நுண்ணறிவும் ஆளுகின்ற இன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் என்பது இயல்பாகக் கிடைத்த ஒன்றாகிவிட்டது. ஆனால், இன்று நாம் பிரான்சில் சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக் காற்று, சரியாக 82 ஆண்டுகளுக்கு முன்பு (ஜூன் 6, 1944) பிரான்சின் நோர்மண்டி கடற்கரையில் சிந்தப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்களின் தியாகத்தால் பெறப்பட்டது என்பதை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
உலக வரலாற்றின் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்த, 'நார்மண்டி தரையிறக்கம்' அல்லது 'டி-டே' (D-Day) என்று அழைக்கப்படும் அந்த மாபெரும் ராணுவ நடவடிக்கையின் தகவல்கள் : 1944-ஆம் ஆண்டு. ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நாசி ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இரும்புப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஜனநாயகம், மனித உரிமை என்ற வார்த்தைகளுக்கே அங்கு இடமில்லை. அந்த இருண்ட காலத்திலிருந்து உலகை மீட்க, நேச நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸின் விடுதலை இராணுவம் ) தீட்டிய மாபெரும் மீட்புத் திட்டம்தான் 'Operation Overlord'. ஹிட்லரின் ராணுவம் பிரான்ஸ் கடற்கரையில் அமைத்திருந்த 'அட்லாண்டிக் சுவர்' என்ற எஃகு கோட்டையை உடைத்து, ஐரோப்பாவிற்குள் நுழைவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
இன்றைய இளைய தலைமுறையினர் 'வியூகம்' (Strategy) சார்ந்த காணொளி விளையாட்டுகளை (Video games) மிகவும் விரும்புவார்கள். ஆனால், அந்த காலத்திலேயே கற்பனைக்கு எட்டாத ஒரு மாபெரும் ஏமாற்று வித்தையை நேச நாடுகள் நிஜத்தில் அரங்கேற்றின. தாக்குதல் நார்மண்டியில் நடக்கப் போகிறது என்ற உண்மையை மறைத்து, 'Calais' என்ற வேறொரு இடத்தில் நடக்கும் என ஜெர்மானியர்களை நம்ப வைப்பதுதான் அந்தத் திட்டம். இதற்காக மரத்தாலான போலி விமானங்கள், காற்றில் ஊதப்பட்ட ரப்பர் பீரங்கிகள் என ஒரு போலியான ராணுவ முகாமையே உருவாக்கி ஹிட்லரை முழுமையாக ஏமாற்றினர். ஒரு மாபெரும் போரை வெல்ல, ஆயுதங்களை விட அறிவும் தந்திரமும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
ஜூன் 6, 1944 நள்ளிரவு. காரிருள் சூழ்ந்த வானத்தில் இருந்து 24,000-க்கும் மேற்பட்ட வான்குடை வீரர்கள் (Paratroopers) எதிரி எல்லைக்குள் பாராசூட் மூலம் குதித்தனர். கீழே எதிரிகளின் எந்திரத் துப்பாக்கிகள் சரமாரியாகச் சுட்டன. பலர் காற்றில் மிதக்கும்போதே உயிரிழந்தனர், இருட்டிலும் சதுப்பு நிலங்களிலும் சிக்கி மூழ்கினர். ஆனால், எஞ்சிய வீரர்கள் அஞ்சாமல் முன்னேறி, ஜெர்மானியர்களின் தொலைத்தொடர்புகளைத் துண்டித்து முக்கியப் பாலங்களைக் கைப்பற்றினர். தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாத அந்த காலத்தில், அசாத்தியமான தைரியம் மட்டுமே அவர்களை வழிநடத்தியது.
விடியற்காலை 6:30 மணி. உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கடற்படைத் தாக்குதல் தொடங்கியது. 7,000-க்கும் மேற்பட்ட கப்பல்களில் வந்திறங்கிய நேச நாட்டு வீரர்கள், உட்டா, ஓமாகா, கோல்டு, ஜூனோ, ஸ்வோர்ட் ஆகிய 5 பிரதான கடற்கரைகளை நோக்கிப் பாய்ந்தனர். இதில் 'ஓமாகா' கடற்கரைத் தாக்குதல் நெஞ்சைப் பிளக்கக்கூடியது. மலையுச்சியில் இருந்து ஜெர்மானியப் படைகள் கொட்டும் மழையைப் போல குண்டுகளைப் பொழிந்தன. கடலில் இறங்கிய மறுகணமே பல வீரர்கள் சுருண்டு விழுந்தனர். அலைகள் மோதும் அந்த நீலக் கடல் முழுவதும் வீரர்களின் ரத்தத்தால் சிவப்பாக மாறியது. தங்கள் கண்முன்னே நண்பர்கள் குண்டு பாய்ந்து துடிதுடித்து இறந்தாலும், மரணத்தைப் பொருட்படுத்தாமல் அந்த இளைய படை வீரர்கள் முன்னேறி அந்த மலையுச்சியைக் கைப்பற்றினர் .
அன்றைய நாளின் முடிவில், 1,50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பிரான்ஸ் மண்ணில் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைத்தனர். ஹிட்லரின் அசைக்க முடியாத கோட்டை சுக்குநூறாக உடைக்கப்பட்டது. அடுத்த பதினோரு மாதங்களில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இது வெறும் போர் வரலாறு அல்ல; அநீதிக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக மனித குலம் வீறு கொண்டு எழுந்த வரலாறு. அன்று நோ ர்மண்டி கடற்கரையில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தியாகம் செய்ததால்தான், இன்று நாம் பிரான்சில் சுதந்திரமான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சுதந்திரம் என்பது உலகின் எப்பகுதியிலும் இலவசமாகக் கிடைத்த பொருள் அல்ல, அது பல இலட்சக்கணக்கான மாவீரர்களின் ரத்தத்தால் எழுதப்பட்ட சாசனம் என்பதை இந்த ஜூன் 6 நோர்மண்டி தரையிறக்க நினைவு தினத்தில் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்!


