அப்பிள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவுப் பாய்ச்சல்!
ஐரோப்பாவில் தாமதமாகும் 'சிரி' (Siri)!
தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் மாபெரும் வருடாந்திர அறிமுக விழா நேற்று திங்களன்று (ஜூன் 8, 2026) அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் (Tim Cook), தனது பொறுப்பை விரைவில் ஜோன் டெர்னஸ் (John Ternus) என்பவரிடம் ஒப்படைக்கவுள்ள நிலையில், அவர் பங்கேற்கும் இறுதி மாபெரும் நிகழ்வாக இது அமைந்தது. இந்த விழாவில், அப்பிள் சாதனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் செயற்கை நுண்ணறிவு (IA - Intelligence Artificielle) தொழில்நுட்பங்கள், புதிய வடிவமைப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் எனப் பல சுவாரசியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் தற்போது நிலவி வரும் மாபெரும் போட்டியைச் சமாளிக்க, பயனர்களின் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் புதிய செயற்கை நுண்ணறிவை உருவாக்கக் கூகுள் நிறுவனத்துடன் அப்பிள் இணைந்துள்ளது. இதனால், நாம் பேசும் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு தானாகவே மின்னஞ்சல்களை அனுப்புவது முதல், புகைப்படங்களை உருவாக்குவது வரை அனைத்திலும் இந்தத் தொழில்நுட்பம் புகுந்து விளையாடவுள்ளது. புதிய 'ஐஓஎஸ் 27' (iOS 27) இயங்குதளம் கொண்ட ஐபோன் 11 மற்றும் அதற்குக் பிந்தைய திறன்பேசிகள் அனைத்திலும், 'மக்' (Mac) கணிப்பொறிகளிலும் இந்த வசதி கிடைக்கவுள்ளது.
அதேபோல, 'சிரி' (Siri) குரல் உதவியாளர் இப்போது திரையில் உள்ளவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு செயல்படும் 'On-screen awareness' திறனைப் பெற்றுள்ளது. ஒரு குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு, அதற்கேற்பத் தானாகவே மின்னஞ்சல் அனுப்பும் அளவிற்கு இது புத்திசாலியாக மாறியுள்ளது. ஒளிப்படக் கருவியிலும் (Camera) புகைப்படங்களை விரிவுபடுத்துதல், வேண்டாதவற்றை நீக்குதல் மற்றும் புகைப்படங்களை முப்பரிமாண (3D) வடிவில் மாற்றுதல் போன்ற வியப்பூட்டும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
வடிவமைப்பில் புதிய பரிமாணம்: லிக்விட் கிளாஸ் (Liquid Glass)
அப்பிள் சாதனங்களின் திரை வடிவமைப்பான 'லிக்விட் கிளாஸ்' தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. திரையின் பின்புலத்திற்கு ஏற்றவாறு நிறங்களை மாற்றியமைக்கும் வசதியும், கணிப்பொறிகளான 'மக்' சாதனங்களில் முப்பரிமாணத் தோற்றத்திலான புதிய ஐகான்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பயனர்களுக்குப் புதியதொரு காட்சி அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலத்தில் குழந்தைகள் அதிக நேரம் திரைகளில் மூழ்கியிருப்பதைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்களுக்கு நிம்மதியளிக்கும் புதிய கட்டுப்பாட்டு வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. குழந்தைகள் தங்களது திறன்பேசியில் புதிய இணையதளங்களைப் பார்வையிட முற்படும்போது, "உலாவ அனுமதி கேள்" (Ask to browse) என்ற வசதியின் மூலம் பெற்றோரின் திறன்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி செல்லும். பெற்றோர் அனுமதித்தால் மட்டுமே குழந்தைகளால் அந்தத் தளங்களைப் பார்வையிட முடியும். அதேபோல, செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போதே அதற்கான குறைந்தபட்ச வயது வரம்பும் காட்டப்படும்; திரைநேரத்தைக் (Screen time) கட்டுப்படுத்தப் புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பியர்களுக்கு ஒரு சிறு ஏமாற்றம்!
இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் சந்தை விதிமுறைகள் (Règlement européen sur les marchés numériques) காரணமாக, அதிநவீனச் 'சிரி ஏஐ' (Siri AI) வசதி உடனடியாக ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முழுமையான அப்பிள் செயற்கை நுண்ணறிவு அனுபவத்தைப் பெறப் பயனர்களிடம் குறைந்தபட்சம் 'ஐபோன் 15 ப்ரோ' (iPhone 15 Pro) சாதனம் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சிவா சின்னப்பொடி


