சுங்கம் தடுத்து வைத்துள்ள தமிழ் எழுத்ததாளரின் படைப்புகளை விடுவிப்பதாக அமைச்சர் அளித்த வாக்குறுதி 'காற்றில் பறந்தது?'
இது ஒரு தமிழ் எழுத்தாளரின் புத்தகம் என்பதாலா அல்லது தமிழ் மொழியில் இருப்பதால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.
சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
நூல்களை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமை குறித்து மீண்டும் வினவியபோது, எழுத்தாளரை இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு அமைச்சர் வேண்டிக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜி.ஜி. சரத் ஆனந்தவினால் 'ஸ்மாரக சிலாவத' என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட, ‘நடுகல்’ நூலின் ஆசிரியராக வாசகர்கள் மற்றும் விமர்சகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்த பிரதீபன் தீபச்செல்வன், இலங்கையில் கலை மற்றும் இலக்கியத்துக்கான சுதந்திரம் இன்னும் மறுக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயம் எனக் குறிப்பிடுகிறார்.
“உண்மையில் எனது நூல்கள் இவ்வாறு முடக்கப்பட்டமை குறித்து நான் மிகுந்த கவலையுடனும் மன உளைச்சலுடனும் இருக்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு, சுதந்திரமாகச் சிந்திக்கும் ஒரு சிந்தனையாளனுக்கு அரசாங்கம் இவ்வாறான விடயங்களைச் செய்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு நல்ல விடயமல்ல. உலகில் எந்தவொரு நாட்டிலும் கலை மற்றும் இலக்கியத்துக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் இன்னும் அந்த ஒடுக்குமுறை, உரிமைகளை மறுத்தல், எழுத்துச் சுதந்திரத்தை மறுத்தல் என்பன இடம்பெறுகின்றன. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.”
பிரதீபன் தீபச்செல்வனின் புனைவுகள் இலங்கையின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி அந்தப் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தனது விற்பனை முகவருக்கு கையால் எழுதப்பட்ட கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக எழுத்தாளர் கூறுகிறார்.
“எனது புத்தகத்தின் விற்பனை முகவர் சுங்கத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட பெப்ரவரி 18 எனத் திகதியிடப்பட்ட கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் எனது புத்தகங்கள் இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் அந்தப் புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் கலாசார அமைச்சு அனுமதியுடனேயே அந்தப் புத்தகங்கள் விடுவிக்கப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.”
இது தொடர்பில் தான் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவிக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய அறிவித்தலுக்கு அமைய, அமைச்சர் உடனடிப் பதிலளித்ததாகவும் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) இவ்விடயத்தில் தலையிடுவதாக உறுதியளித்ததாகவும் பிரதீபன் தீபச்செல்வன் தெரிவிக்கிறார்.
“நான் சனிக்கிழமை (மார்ச் 28) பகல் கலாசார அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் எனது புத்தகங்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும், அவற்றை விடுவிக்குமாறும் குறிப்பிட்டிருந்தேன். கடந்த காலங்களிலும் எழுத்தாளர்களுக்கு இவ்வாறான பல தடைகள் விதிக்கப்பட்டன, பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வாறு இன்றி நாம் சுதந்திரமாக வாழவும் சுதந்திரமாக எழுதவும் இடமளிக்க வேண்டுமென அந்த கடிதத்தில் கோரியிருந்தேன். நான் அந்த கடிதத்தை அனுப்பி சில மணித்தியாலங்களில் - ஒரு மணித்தியாலத்திற்குள் என்று நினைக்கிறேன் - அமைச்சர் எனது நண்பர் ஒருவருக்கு செய்தி அனுப்பியிருந்தார். தான் இந்தியாவில் இருப்பதாகவும், இரண்டு நாட்களில் வந்து புத்தகங்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அடுத்த நாள் (மார்ச் 29) ஞாயிற்றுக்கிழமை, கலாசார அமைச்சர் எனது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி, திங்கட்கிழமை இலங்கை வந்தடைந்தவுடன் அந்த வேலைகளை கவனிப்பதாகக் கூறினார்.”
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஏப்ரல் 2ஆம் திகதியும் பிரதீபன் தீபச்செல்வனுக்கு அவரது படைப்புகள் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் பொறுமையாக இருக்குமாறும் அறிவித்துள்ளார்.
"அப்போது நான் நினைத்தேன் பழைய அரசாங்கங்களின் கொள்கையினால்தானே இந்தப் புத்தகங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் அதனால் அமைச்சர் தலையிட்டால் இரண்டு நாட்களில் இவை விடுவிக்கப்படும் என்றும் கருதினேன். ஆனால் இன்னும் புத்தகங்கள் விடுவிக்கப்படவில்லை, ஆனாலும் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாக அறியக் கிடைத்துள்ளது. கலாசார அமைச்சர் அந்த வேலைகளைச் செய்துள்ளார், பாதுகாப்பு அமைச்சு ஊடாகவும் அது குறித்து கவனிக்கப்படுவதாக இன்றும் (ஏப்ரல் 02) அமைச்சர் சொன்னார். புத்தகங்கள் விரைவில் விடுவிக்கப்படும், சற்றுப் பொறுமையாக இருக்குமாறு அவர் சொன்னார்.”
சுங்கத் திணைக்களம் படைப்புகளைத் தடுத்து வைப்பதற்கும் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அந்தப் படைப்புகளின் ஆசிரியர் தமிழராக இருப்பதுதான் காரணமா என பிரதீபன் தீபச்செல்வன் கேள்வி எழுப்புகிறார்.
“ஆனால் உண்மையில் எமது புத்தகங்களை, எமது படைப்புகளை இவ்வாறு சுங்கத் திணைக்களம் தடுத்து வைப்பதையும் விசாரணைகளை முன்னெடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு தமிழ் எழுத்தாளரின் புத்தகம் என்பதால்தான் அல்லது தமிழ் மொழியில் இருப்பதால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.”
மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவியில் இருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் முதல் பிரஜையாக இருந்தபோது, தனது நூலின் தமிழ் பிரதிகளை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்த விதத்தையும் நினைவுகூர்ந்த பிரதீபன் தீபச்செல்வன், அந்த நூல் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட பின்னர் இலங்கையின் சிங்கள வாசகர்கள் எந்தவொரு எதிர்ப்புமுமின்றி அந்த நூலை ஏற்றுக்கொண்ட விதத்தையும் நினைவுகூர்ந்தார்.
“தடுத்து வைக்கப்பட்ட புத்தகங்கள் - கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனது ‘நடுகல்’' நாவலின் 60 புத்தகங்களை இலங்கைக்கு கொண்டு வந்தபோது சுங்கத் திணைக்களம் அவற்றை தடுத்து வைத்தது. அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்துக்கு நான் ஒரு ஓவியத்தை மட்டுமே பயன்படுத்தியிருந்தேன். ஆனால் அதே நாவல் சிங்களத்தில் அச்சிடப்பட்டு வந்தபோது, அதன் அட்டைப்படத்தில் எல்.ரி.ரி.ஈ துயிலும் இல்லத்தின் கல்லறை புகைப்படத்தைப் போட்டிருந்தும் சிங்கள மக்கள் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டவில்லை. எல்லோரும் அந்த நாவலை ஏற்றுக்கொண்டார்கள்.”
இவ்வாறானதொரு நிலையில் கலை மற்றும் இலக்கியத்துக்கு இப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளை அரசாங்கமே முன்னெடுக்கிறதா என குறித்த தமிழ் எழுத்தாளர் மேலும் கேள்வி எழுப்புகிறார்.
“அப்படியானால் சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது இந்தப் படைப்புகளை அரசாங்கம் ஏன் தடை செய்கிறது? அரசாங்கமே இவ்வாறான ஒடுக்குமுறைகளைச் செய்கிறதா? இந்த அரசாங்கமும் அதையே செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு புத்தகம் தமிழில் எழுதப்படும்போது பிரச்சினையாகி, அதுவே சிங்களத்தில் வரும்போது பிரச்சினையாகாமல் இருப்பது எப்படி? தமிழில் எழுதுவது ஒரு தமிழர் என்பதாலா இந்தப் பிரச்சினை வருகிறது? இதுதான் இலங்கையிலுள்ள பாரபட்சமா என்ற கேள்வியும் எழுகிறது.”
இலங்கையில் எந்தவொரு படைப்பாளிக்கும் தனக்கு நேர்ந்த கதி ஏற்படக்கூடாது என எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வன் மேலும் தெரிவித்திருந்தார்.
“எனது புத்தகங்கள் விடுவிக்கப்படுவதோடு மாத்திரம் இது முடிந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அரசாங்கத்தின் கொள்கை ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும். இனிமேல் இலங்கையில் எந்தவொரு தமிழ் எழுத்தாளருக்கு மாத்திரமல்ல, எந்தவொரு படைப்பாளிக்கும் தனது புத்தகங்கள் குறித்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடக்கூடாது என, நான் பிரார்த்திக்கிறேன்.”
பிரதீபன் தீபச்செல்வனின் புனைவுப் படைப்பின் 360 பிரதிகளை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்ததன் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சித்த தணிக்கையானது, பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியாகும் என சுதந்திர ஊடக இயக்கம் ஏப்ரல் 2ஆம் திகதி கண்டனம் தெரிவித்திருந்தது.
அந்த அமைப்பின் அழைப்பாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் திலீஷா அபேசுந்தர ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையினூடாக, எழுத்தாளர் தீபச்செல்வனின் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளைத் தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திடம் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அவையாவன,
• இந்தப் படைப்புகளைத் தடுத்து வைப்பது தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய தரப்பு எது?
• இந்தப் படைப்புகளின் உள்ளடக்கம் சட்டவிரோதமானதாகவோ அல்லது தேசியப் பாதுகாப்புக்கு பாதகமனதாகவோ அமையுமா? அவ்வாறெனில் அது எவ்வாறு?
• சுங்க விடுவித்தல் பணிகளின் போது இலக்கியப் படைப்பு தொடர்பான விடயங்களைத் தீர்மானிப்பதற்கு சுங்கத் திணைக்களத்திடம் உள்ள துறைசார் நிபுணத்துவம் என்ன? என்பனவாகும்.
இலங்கைச் சுங்கத் திணைக்களம் இந்தக் கேள்விகளுக்கு எவ்வாறான பதில்களை வழங்கினாலும், ஒரு படைப்பாளிக்குரிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அவரது வாசகர்களுக்குரிய அறிந்து கொள்ளும் உரிமையை மீறுவதற்கே அவர்கள் முறையற்ற விதத்தில் தலையிட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சுங்கத் திணைக்களம் என்பது ஒரு அரச நிறுவனம் என்பதால், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பேணப்பட வேண்டிய வகைக்கூறலிலிருந்து அரசாங்கமும் விலகிச் செல்ல முடியாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சண் பார்தீபன்


