ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு அதன் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மிகவும் சிறப்பானதொரு பழைய மாணவர் சமூகத்தைப் பெற்றிருக்கின்றது!
ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு அதன் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி அந்த வகையில் மிகவும் சிறப்பானதொரு பழைய மாணவர் சமூகத்தைப் பெற்றிருக்கின்றது. அந்தப் பழைய மாணவர்களின் அளப்பரிய பங்களிப்பின் ஊடாகவே இக்கல்லூரி கல்வியிலும் பௌதீக வளத்திலும் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 3 மாடிகளையும், 30 வகுப்பறைகளையும் கொண்ட புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுகை நிகழ்வு, கல்லூரி வளாகத்தில் நேற்று (09) வியாழக்கிழமை மதியம் பாடசாலை அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கௌரவ ஆளுநர் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நடுகை செய்தனர்.
இந்த நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் மேலும் உரையாற்றுகையில்:
ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எத்துணை முக்கியமோ, அதே அளவுக்குப் பௌதீக வளமும் அவசியமானதாகும். பாடசாலைச் சமூகத்தின் பூரண ஆதரவில்தான் ஒரு பாடசாலையின் உண்மையான வளர்ச்சி தங்கியிருக்கின்றது. இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் பலரும் ஒன்றிணைந்து இந்தப் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு முன்வந்துள்ளமை மிகவும் போற்றுதலுக்குரியது. மூன்று கட்டங்களாக இந்தக் கட்டடப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தச் சிறப்பான பங்களிப்பைச் செய்த பழைய மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உண்மையில், பழைய மாணவர்களின் அதீத ஆர்வமும், விடாமுயற்சியுமே இந்தப் பிரம்மாண்டமான கட்டடம் அமையவுள்ளமைக்கு முக்கிய காரணமாகும். இந்தப் பணிகள் அனைத்தும் மிக விரைவாக நிறைவுற்று, இக்கட்டடம் விரைவில் திறப்பு விழாக் காணும் என நான் திடமாக நம்புகின்றேன். அதற்கு இறைவன் துணைபுரிவார்' என்று தெரிவித்தார்.
இந்த அடிக்கல் நடுகை நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர், பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


