பொருளாதார வீழ்ச்சிக்கு முழுப் பொய்களே காரணம்.! - வஜிர அபேவர்தன
அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பொய்களைக் கூறுவதன் காரணமாகவே இலங்கை பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி
அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தொடர்ச்சியாகப் பொய்களைக் கூறி வருவதன் காரணமாகவே இலங்கையின் பொருளாதாரம் இன்று பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசும் அதே பொய்ப் பிரசாரங்களைத் தொடர்வதால், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்த பொருளாதாரம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது என்றும் அவர் சாடினார்.
கொழும்பில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "இலங்கை வரலாற்றில் அதிகளவு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்த அரசாக தற்போதைய ஆட்சி மாறியுள்ளது. கடந்த 78 வருட கால வரலாற்றில் நாட்டை நிர்வகித்த கட்சிகள் சில பணிகளைச் செய்திருந்தாலும், தனிப்பட்ட பதவி ஆசைகளுக்காக மக்களை ஏமாற்றி, பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ளனர். இனியாவது பொய் சொல்வதை நிறுத்துவதே இவர்கள் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பொறுப்பேற்ற போதெல்லாம் முறையான இலக்குகளுடனேயே செயற்பட்டார். நெருக்கடியான காலகட்டத்திலும் கூட எரிபொருள் விலைகள் மக்களால் தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் முகாமைத்துவம் செய்யப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய அரசின் கீழ் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்ந்து செல்கின்றன. கடந்த 2024 செப்டெம்பரில் ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஒப்படைக்கும் போது 344 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் பெற்றோல் இன்று 398 ரூபாவாகவும், 2 ஆயிரத்து 892 ரூபாவாக இருந்த எரிவாயுவின் விலை 4 ஆயிரத்து 765 ரூபாவாகவும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பொய்களைக் கூறி நாட்டை நிர்வகித்தால், இலங்கை மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அரசின் திட்டமிடப்படாத மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பயணத்தால், மிக விரைவில் இந்த ஆட்சி பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும்." - என்றும் வஜிர அபேவர்தன எச்சரிக்கை விடுத்தார்.


