கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ளது!
தற்போதைய சட்டக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் நீதித்துறை
இலங்கையில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆகியவற்றில் உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ளது. துஷ்பிரயோகங்கள் தொடர்பான தெளிவான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், தற்போதைய சட்டக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் நீதித்துறையும், பாதுகாப்புத் துறையும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஆண்டுத்தோறும் சராசரியாக 10,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இடம்பெற்று வருகின்றது. கலாசாரம் மற்றும் ஆன்மீக விழுமியங்களுடன் பிணைந்துள்ள ஒரு நாட்டில் இத்தகைய புள்ளிவிபரம் பதிவாவது ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கப்படவேண்டிய விடயமாகும்.
இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சிறுவர்களில் முன்பள்ளி மற்றும் பாடசாலைச் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சம்பவங்களில் துஷ்பிரயோகத்தை மேற்கொள்பவர்கள் அந்தச் சிறுவர்களின் நெருங்கிய சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களே ஆகும். பாடசாலை ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், குடும்பத்தின் நெருங்கிய நண்பர்கள், பெற்றோரின் உறவினர்கள் அல்லது குடும்பத்தாரோடு பழகும் நண்பர்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்புடைய அரச மற்றும் தனியார் காப்பகங்கள், சமய தலங்கள், நன்னடத்தை இல்லங்கள் மற்றும் சட்டவிரோதனமான முறையில் சிறுவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அல்லது யாசகம் எடுக்கும் தொழிலில் ஈடுப்படுத்தப்படும் இடங்களிலும் இத்தகைய கொடுமைகள் நடைபெறுகின்றன.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சிறுவர்களில் பெரும்பான்மையானோர் பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது வைத்தியசாலைகளுக்கோ கொண்டு செல்லப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் கர்ப்பமடையும் போது அவை சட்டவிரோதமான முறையில் கலைக்கப்படுகிறது. ஏதேனும் தீவிரப் பாதிப்புகள் ஏற்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்படும் போது மாத்திரமே இவை உத்தியோகப்பூர்வமாகப் பதிவாகின்றன. அத்துடன் வெறும் உடலியல் ரீதியானவை மட்டுமல்லாது சிறுவர்களின் மன நலனையும் பாதிப்படையச் செய்கிறது. இதனால் சிறுவர் தாய்மார் உருவாக்கம், பாலியல் ரீதியான நோய்தொற்றுகள், மனநோய்கள், கல்வி சீர்குலைதல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல், சமூகத்துக்கு தீங்கிழைக்கும் நபர்களாக மாறுதல் போன்றவையும் இடம்பெறுகின்றன.
பொதுவாகப் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக பேசப்பட்டாலும், ஆண் பிள்ளைகளும், வயது வந்த ஆண்களும் சில சந்தர்ப்பங்களில் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில பெண்களால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சம்பவங்களும் சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது. இதேவேளை, துஷ்பிரயோகக் குற்றவாளிகளாக மாறும் பலரும் தங்களின் சிறுவர் பருவத்தில் ஏதேனும் வகையில் துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையை தடுப்பதற்கு வெறும் மேலோட்டமான கருத்துக்களை தாண்டி சமூக ரீதியாக பாரிய விழிப்புணர்வும், அணுகுமுறை மாற்றங்களும் அவசியமாகும். பெற்றோர்கள், குடும்பப் பின்னணி, பாடசாலை மற்றும் சமூகம் என்று அனைத்து தரப்பினருக்கும் சமமான பொறுப்பு உள்ளது. துஷ்பிரயோகங்கள் தொடர்பான தெளிவான ஆதாரங்கள் இருக்கும் நிலையில் சட்டம் பாரபட்சமின்றி பிள்ளைகளுக்கு முழுமையான நீதி வழங்கப்பட வேண்டும். தற்போதைய சட்டக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் நீதித்துறையும், பாதுகாப்புத் துறையும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.


