வடக்கில் 'திலாப்பியா' மீன்வளர்ப்பு மையம் - சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடவடிக்கை
நன்னீர் மீன்பிடி நடவடிக்கையின் முக்கிய தளமாக உள்ள இரணைமடு!
சர்வதேச தொழிலாளர் அமைப்பு, கார்கிள்ஸ் (சிலோன்) பிரைவேட் லிமிடெட்டுடன் இணைந்து நோர்வே அரசின் அனுசரணையுடன் 'திலாப்பியா' மீன்வளர்ப்பு மற்றும் ஆரம்பநிலை பெறுமதிசேர் மையமொன்றை வடக்கு மாகாணத்தில் நிறுவியுள்ளது. இத்திட்டம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனுடைய மீன்வளர்ப்பினை வலுப்படுத்துவதையும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்துவதையும், இப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்களுக்கான மரியாதையான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதையும் பிரதான இலக்குகளாகக் கொண்டிருக்கிறது.
இச்செயற்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துரைத்திருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் ஜோனி சிம்ப்சன், 'சமூகங்கள், அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் தனியார் துறை என்பன இணைந்து செயற்படும்போது எதனைச் சாதிக்கமுடியும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்தப் பதனிடும் நிலையம் காணப்படுகிறது. இது நீர்வாழ் உயிரின வளர்ப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கு மாத்திரமன்றி, குறிப்பாகப் பெண்கள் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு கௌரவமானதும் உற்பத்தித்திறன் மிகுந்ததுமான வேலைவாய்ப்புக்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் சமூக நீதியை மேற்படுத்துவதற்குப் பங்களிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
நன்னீர் மீன்பிடி நடவடிக்கையின் முக்கிய தளமாக உள்ள இரணைமடுவில் அமைந்திருக்கும் இந்த மையம், இலகுவில் அபாயத்துக்கு உள்ளாகக்கூடிய நபர்கள் மற்றும் குழுக்களின் முயற்சியாண்மையை ஊக்குவித்தல் திட்டத்தின்கீழ் நிறுவப்பட்டதாகும்.
நோர்வே அரசின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டமானது இலங்கையின் வட பிராந்தியத்தில் சகலரையும் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பிரதான பங்களித்தது. இத்திட்டமானது குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களை இலக்குக் குழுக்களாகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்செயற்திட்டம் பற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான நோர்வே நாட்டின் அரசியல் பிரிவின் இரண்டாம் செயலாளர் டார்மோட் நூலாண்ட், 'பல திட்டங்களின் ஊடாக நோர்வே நாட்டின் நீண்டகாலப் பங்குதாரராக சர்வதேச தொழிலாளர் அமைப்பு இருக்கிறது. இத்திட்டங்கள் வடமாகாணத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்கின்றன. அதன் நீட்சியாகத் தற்போதைய புதிய திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எமது ஆதரவு மிகமுக்கியமானதாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


