இலங்கைக்கு கடத்தவிருந்த 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
இலங்கையில் ஹெரோயின், கொகெய்ன் மற்றும் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) போன்ற ஆபத்தான போதைப்பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இப்பகுதிகள் வழியாக அண்மைக்காலமாக கஞ்சா, உரம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மஞ்சள் போன்றவற்றுடன் போதை மாத்திரைகளும் சட்டவிரோதமாகக் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நேற்று (25 மே) மாலை மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காக, சரக்கு வாகனம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) பெறுமதியான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய கடலோர காவல்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ‘ஹோவர்கிராப்ட்’ (Hovercraft) ரோந்துக் கப்பல் மூலம் மண்டபம் மற்றும் வேதாளை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சீனியப்பா தர்கா கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சரக்கு வாகனம் ஒன்றில் இருந்து படகுக்கு பெட்டிகள் ஏற்றப்படுவது கண்டறியப்பட்டது. காவல்படையினர் அவர்களை நோக்கி விரைந்தபோது, படகில் இருந்த இருவர் கடலுக்குள் தப்பிச் சென்றனர். அதேநேரம், கரையில் இருந்தவர்கள் கடத்தல் பெட்டிகளை கடற்கரையிலேயே வீசிவிட்டு சரக்கு வாகனத்துடன் தப்பியோடினர்.
இதனையடுத்து, அங்கு கைவிடப்பட்டுக் கிடந்த 12 பெரிய பெட்டிகளை மீட்ட கடலோர காவல்படையினர், அவற்றை மண்டபம் முகாமிற்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் இலங்கையில் அதிக தேவையுடைய மற்றும் தடை செய்யப்பட்ட போதை உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த மாத்திரைகள் இலங்கையில் ஹெரோயின், கொகெய்ன் மற்றும் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) போன்ற ஆபத்தான போதைப்பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் அனைத்தும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், தப்பியோடிய மர்ம நபர்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் குறித்து மண்டபம் கடலோரக் காவல் நிலைய (Marine Police) அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காவற்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி கடலோரக் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


