மானிப்பாய் சபையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுமதி மறுப்பு - உறுப்பினர் வெளிநடப்பு!
மானிப்பாய் சபை குறித்து மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை.
மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வினை செய்தி அறிக்கையிடுவதற்கு ஊடகவியலாளர் புவனேஸ்வரன் கஜிந்தனுக்கு இன்றையதினம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உறுப்பினர் ச.க.அச்சுதபாயன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
ஊடகவியலாளர் கஜிந்தனும் வேறொரு ஊடகவியலாளரும் இன்றையதினம் மானிப்பாய் சபை அமர்வினை அறிக்கையிட சென்றபோது மற்றைய ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநடப்பு செய்த உறுப்பினர் அச்சுதபாயன் கருத்து தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர் கஜிந்தன் கட்டடம் அமைப்பு தொடர்பாக தவறான செய்தி ஒன்றினை பிரசுரித்ததாக கருதியே இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வெளிப்படுத்திய விடயம் தவறல்ல.
மானிப்பாய் சபை குறித்து மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை. சபையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. இருப்பினும் அவற்றை திருத்தாமல், அவை செய்தியாக பிரசுரிக்கப்படும்போது அந்த செய்தியை வெளியிடும் ஊடகவியலாளரை வெளியேற்றுவது தவறான செயல்.
குற்றம் இழைக்காதவர்கள் பயப்பட தேவையில்லை. சபையில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊடகவியலாளரை உள்ளே விடத்தான் விருப்பம். ஆனால் தவிசாளர்தான் இந்த தடையை ஏற்படுத்தினார். குறித்த ஊடகவியலாளருக்கு எப்போது அனுமதி வழங்கப்படுகிறதோ அப்போதுதான் நான் சபை அமர்வில் கலந்துகொள்வேன் என்று கூறிவிட்டு சபை அமர்வில் இருந்து வெளியேறிவிட்டேன் என்றார் உறுப்பினர் ச.க.அச்சுதபாயன்.


