முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அவதானித்தவை! - உறவென்றின் உருக்கமான பகிர்வு.
கடந்த முறையை விட இம்முறை அதிக வாகன நெரிசல் அவதானிக்கப்பட்டது. இதனை விரைவாக சீர்செய்ய சாரணர் அணியைப்போல ஒரு தொண்டர் அணியாவது அவசியம்.
இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அவதானித்தவை!
1. கடந்த வருடத்தைவிட இவ்வருடம் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். 2000 விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. விளக்குகளுக்கு வெளியே பல்லாயிரக்கணக்கானவர்கள் நின்றிருந்தனர்.
2. எனவே இவ் அதிகரிப்பு அடுத்தடுத்த வருடங்களில் மேலும் அதிகரிக்கும். மாவீரர் நாளுக்கு மக்கள் தத்தம் மாவட்டங்களிலே திரண்டு வணக்கம் செலுத்த முடியும். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அப்படியல்ல. வடக்கு கிழக்கு முழுவதும் ஒரு குறுகிய இடத்தில் திரளும். இத்திரட்சி அடுத்துவரும் வருடங்களில் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் சில முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டியுள்ளது.
3. கடந்த முறையை விட இம்முறை அதிக வாகன நெரிசல் அவதானிக்கப்பட்டது. இதனை விரைவாக சீர்செய்ய சாரணர் அணியைப்போல ஒரு தொண்டர் அணியாவது அவசியம். ஏதாவது விக்கினங்கள் நடந்துவிட்டால் அதை வைத்துக்கொண்டே தடைப்பத்திரத்தோடு வருவார்கள் என்பது நாமறியாததல்ல.
4. இவ்விடத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை இரண்டு விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். நினைவேந்தலுக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு போதிய ஒழுங்குகள் இன்றி இடர்படுகின்றனர். எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடமொன்றினை ஒழுங்குபடுத்தவேண்டியுள்ளது.
5. கடந்த சில வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற முன்பும், இடம்பெற்றுக்கொண்டிருக்கும், இடம்பெற்ற பின்பும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட குளிர்பானங்கள் நினைவேந்தல் மையத்தின் எல்லைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டன. அந்த வரிசையில் இம்முறை நடமாடும் ஊதுபத்தி விற்பனையாளர்களும், யாசகம் கேட்கும் ஆண்களும் அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளினை முன்னிட்டு முல்லைத்தீவின் அநேக இடங்களில் வணிக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுக்கிடக்க நினைவேந்தல் மையத்திற்குள் சிறு வியாபாரங்களை அனுமதிப்பது நினைவேந்தலை அவமதிப்பதாகும். இந்த வியாபாரம் படிப்படியாக வளரும். வளர்ந்த பின்னர் தடுக்க முடியாது. எனவே பிரதேச சபையினர் இப்போதே தடுப்பதே நல்லது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அம்பாறை, மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு என நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர். இந்த மாவட்டங்களிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு வருவதற்கு மிக நீண்ட நேரம் எடுக்கும். எனவே அவர்கள் வந்து தம் இயற்கை கடமைகளை முடித்து, ஒரு தேநீரை பருகிவிட்டு வருவதற்கான பொது இட ஏற்பாடுகளை செய்வது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நாம் வந்தாரை வாழவைக்கும் பெருநில மரபினர்.
இறுதியாக ஒரு விடயம். ஒவ்வொரு வருடமும் விரிவு பெற்று வரும் நினைவேந்தல் காரியங்களை ஆற்ற மிகப்பெரிய மனித வலு தேவைப்படும். அந்த மனிதவலுவானது தமிழ் சமூகம் கூட்டகத்தாங்கி பகிரப்பட வேண்டியது. எனவே நினைவேந்தலுக்கு வரும் இளையவர்களையாவது நினைவேந்தலின் பின்னரான கடமைகளுக்கு பரிச்சயப்படுத்துவது நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் முன்னுள்ள பொறுப்பாகும்.


