ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படம்!
சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று 'இந்த ஆவணத்திரைப்படம் தமிழ் சட்டத்தரணியும், அரசியல்வாதியுமான எனது நண்பர் நீலன் திருச்செல்வத்தைப் பற்றியதாகும். அவர் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியவராவார். நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும், போரை நிறுத்துவதற்கும் ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அவர் அயராது உழைத்தார். உலகளாவிய அமைதித் தூதுவராகவும், மனித உரிமை ஆர்வலராகவும் திகழ்ந்த அவர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த மனிதராவார்' என்றும் எரிக் சொல்ஹெய்ம் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை 'துரதிஷ்டவசமாக 1999 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் விளைவாக, இந்தக் கொடூர மோதலினால் பலியான பலரில் அவரும் ஒருவராக மாறினார். பின்னாளில் சமாதானத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திப் பணியாற்றிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அன்ரன் பாலசிங்கம், இதுவரை முன்வைக்கப்பட்டவற்றில் நீலனின் அரசியலமைப்பு முன்மொழிவுகளே மிகச்சிறந்தவை எனக் குறிப்பிட்டார்' என்றும் அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையின் மையமாகத் திகழும் அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆவணத்திரைப்படம் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


