பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராஜாவுக்கு அனுதாபமும் புகழாரமும்!
தமிழ் இளைஞர்கள் தமது உரிமைகளைக் கோரி ஆயுத வழியில் பயணித்தபோதும் தமிழ் மக்களின் உரிமைக்காக இறுதிவரை அஹிம்சை வழியில் சேனாதிராஜா.

தமிழ் இளைஞர்கள் தமது உரிமைகளைக் கோரி ஆயுத வழியில் பயணித்தபோதும் தமிழ் மக்களின் உரிமைக்காக இறுதிவரை அஹிம்சை வழியில் பயணித்து, அரசியல் செய்த பெரும் தலைவர் மாவை சேனாதிராசா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க புகழாரம் சூட்டினார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் , உறுப்பினர்கள் அமரர் மாவை சேனாதிராசாவின் இழப்புக்கு அனுதாபம் தெரிவித்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரிசாட் பதியூதீன். ரவூப் ஹக்கீம் உட்பட சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், குகதாசன், ஸ்ரீ நேசன் ஆகியோர் அனுதாபம் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற காலம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா, கோசல நுவன் ஜயவீர, டொனால்ட் திசாநாயக்க, சூரியபெரும ஆகியோருக்கான அனுதாப பிரேரணையின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனுதாபம் தெரிவித்தனர்.
எதிர்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக உரையாற்றுகையில், தமிழ் மக்களுக்காக தன்னை இறுதிவரை அர்ப்பணித்தவர் மாவை சேனாதிராஜா.அவர் பிறந்தது முதல் இறக்கும் வரை தனது சொந்த மண்ணிலேயே இருந்தார். அரசியல் செய்தார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் கொழும்பில் வாழ்ந்த போதும் மாவை சேனாதிராஜா தனது சொந்த மண்ணில் தான் வாழ்ந்தார்.தனது மக்களுக்காக பல சாத்விக போராட்டங்களில் அவர் முன்னின்றார். எம்முடன் எப்போதுமே அவருக்கு நல்லுறவு இருந்தது என்றார்.