தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா அமித்ஷா வருகை..? - சூடு பறக்கும் மதுரை!
தமிழக திரைப்படத்துறைக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் மதுரை எப்போதுமே உரைகல்லாகவே திகழ்ந்து வருகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 5-ஐ அதிமுக கைப்பற்றிய நிலையில், இந்த முறை அது மேலும் அதிகரிக்கும் என அதிமுகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ரோடு ஷோ நடத்திய த.வெ.க. விஜய், திமுகவின் பொதுக்குழு, அதை ஒட்டி ஸ்டாலினின் ரோடு ஷோ, தற்போது அமித்ஷா பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் என மதுரை சூடு பறக்கும் நிலையில், அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் என்னவிதமான தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.
தமிழக திரைப்படத்துறைக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் மதுரை எப்போதுமே உரைகல்லாகவே திகழ்ந்து வருகிறது. அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழக அரசியல் கட்சிகள், மதுரையின் அரசியல் நாடித்துடிப்பை அறிந்து கொள்வதில் மிகுந்த விருப்பம் காட்டி வந்தனர். அதுமட்டுமன்றி, எம்ஜிஆர் தான் போட்டியிடக்கூடிய சட்டமன்ற தொகுதியை கூட மதுரையில்தான் தேர்வு செய்தார். வருகின்ற 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு 17ஆவது பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான கூட்டணிகள், தேர்தல் கால பேரங்கள் பல்வேறு கட்சிகளால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தான் நடிக்கும் திரைப்படத்திற்காக திண்டுக்கல் செல்லும் வழியில் கடந்த மே 2-ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்த நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், அறிவிக்கப்படாத ரோடு ஷோ-வையே நடத்தினார். பெருந்திரளான அவரது ரசிகர்கள் கூட்டம் அரசியல் கட்சிகளை மிரள வைத்தது. இதனையடுத்து மதுரை அரசியல் களம் சூடு பறக்கத் தொடங்கிய நிலையில், திடீரென கடந்த ஜூன் 1ஆம் தேதி திமுக-வின் பொதுக்குழுவை அமைச்சர் மூர்த்தி மதுரையில் நிகழ்த்திக் காட்டியதுடன், அதன் தொடர்ச்சியாக பொதுக்குழுவிற்கு முதல் நாள் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வை மதுரை மாநகருக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் வழியே நடத்தி, முஸ்தீபு செய்தார். இதற்கிடையே அதிமுக-வும் தனது பங்கிற்கு செயல்வீரர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு என முழுவீச்சில் களத்தில் இறங்கி தேர்தல் வேலையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில்தான் பாஜக-வுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்து முன்னணி, வருகின்ற ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடத்த முடிவு செய்து, கடந்த மே 28ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை அழைத்து பூமி பூஜை நடத்தியது. ஆன்மீகம் சார்ந்த மாநாட்டை, தமிழகத்தில் அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக இது அமையும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளதுதான் ஹைலைட். இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ஆம் தேதி பாஜக சார்பாக மதுரை ஒத்தக்கடையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஜூன் 7-ஆம் தேதியே மதுரை வருகிறார். மதுரை புறவழிச்சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், அங்கு தனது கட்சி நிர்வாகிகளை மட்டுமன்றி, வேறு சில முக்கிய பிரமுகர்களையும் சந்திக்க உள்ளதாக தகவர் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு பாஜக, பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறங்கிய பேராசிரியர் ராம.சீனிவாசன், அதிமுக கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்ட நிலையிலேயே வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு அடுத்தபடியாக 2,20,914 வாக்குகள் பெற்று 2-ஆம் இடம் பெற்றது. பாஜக-வின் வாக்குவிகிதம் எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தத் தேர்தலில் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக அமித்ஷா பரப்புரை செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.
வழக்கம்போலவே சாதி ஓட்டுக்களை மையப்படுத்தி பாஜக, இந்த முறையும் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காகவே மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள். மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றியை முடிவு செய்யும் வாக்காளர்களாகத் திகழும் சௌராஷ்டிரர்கள் உள்பட பிற தொகுதிகளில் உள்ள முக்குலத்தோர், கோனார், செட்டியார், வேளாளர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற மொழிச் சாதியினரான ரெட்டியார், நாயுடு, நாயக்கர் என சாதிகள் வாரியாக அதன் பிரதிநிதிகளைச் சந்தித்து, பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார் என அவர்கள் தெரிவித்தாலும், திமுகவுக்கு எதிராக அதிமுகவின் கூட்டணியை வலுப்படுத்தத் தேவையான அனைத்துப் பணிகளையும் முடுக்கிவிடுவதே அமித்ஷா வருகையின் முக்கிய நோக்கம் என்கின்றனர் பாஜகவிலுள்ள மற்றொரு தரப்பார். ஆடிட்டர் குருமூர்த்தி-ராமதாஸ் சந்திப்பை அமித்ஷா வருகையோடு தொடர்புபடுத்தி அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமன்றி, ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் அமித்ஷா தொலைபேசியில் உரையாடியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக-வில் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை இணைக்கும் முயற்சியையும் அமித்ஷா மேற்கொள்கிறார் எனவும் கூறப்படுகிறது. மதுரை வரும் அமித்ஷாவை, அவர் தங்கும் விடுதியில் ஓ.பி.எஸ்.சும், டிடிவி தினகரனும் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் உள்ளது.
அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் வகையில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அமித்ஷாவின் பொதுக்கூட்ட மேடையில் ஏறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பாஜக-வினர் மத்தியில் மற்றொரு தகவல் உலவுகிறது. மதுரை திமுகவைப் பொறுத்தவரை பல்வேறு உள்கட்சிக் குழப்பங்களால், கோஷ்டிப் பிளவுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-பாஜகவின் கூட்டணி மேலும் வலுவான வெற்றிக்கு வித்திடக்கூடும் என பாஜக-வினர் புளகாங்கிதமடைகின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 5-ஐ அதிமுக கைப்பற்றிய நிலையில், இந்த முறை அது மேலும் எளிதாக வாய்ப்புள்ளது எனவும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வருகை உறுதியாகுமானால் குறைந்தபட்சம் 8 தொகுதிகளையாவது அதிமுக கூட்டணி வெல்லக்கூடும் எனவும் கூறுகின்றனர்.
அண்மையில் ரோடு ஷோ நடத்திய முதல்வர் ஸ்டாலின், தனது அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்றபோது, அழகிரி தரப்பிலிருந்து அவரது ஆதரவாளர்களான மன்னன், முபாரக் மந்திரி உள்ளிட்டோரை திமுகவில் மீண்டும் சேர்க்க கோரிக்கை விடப்பட்டதாகவும், இதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து பார்க்கலாம் எனக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இவர்களை மீண்டும் திமுகவில் இணைக்க கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதற்கு அழகிரி தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அழகிரி தரப்பினர் திமுகவுக்கு எதிராக தேர்தல் பணியாற்ற உள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
இதனை அதிமுக-பாஜக கூட்டணி தங்களுக்கு சாதகமானதாகக் கருதுகிறது.இத்தனைக்கும் மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் மட்டுமன்றி, தமிழக அரசியலிலும் பலவித தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைவதற்கு உண்டான அச்சாரமாகவும் அமித்ஷாவின் வருகை நிச்சயமாக அமையும் என காவி தொண்டர்கள் உற்சாகத்துடன் களமிறங்கி உள்ளனர்.