பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிரடி.. குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
நீதிபதியின் தீர்ப்பை கேட்டதும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமாக ரூ.85 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டதும், குற்றவாளிகளும், அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தாக்கி, சில இளைஞர்கள் தொடர்ந்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே, இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், போலீஸில் துணிச்சலாக புகார் அளித்ததால் இந்தக் கொடூரச் சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மாணவிகளின் பாலியல் வன்புணர்வு வீடியோவும் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியில் செல்வாக்கு இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அன்றைய எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்தி வந்தது.
1,500 பக்க குற்றப்பத்திரிகை:
இதன்பேரில், இந்த வழக்கை, சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ எடுத்துக் கொண்டது. பின்னர் நடந்த விசாரணையில், கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரிராஜன், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார், சதீஷ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டு சதி உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது 1,500 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையையும் சிபிஐ சமர்ப்பித்தது.
குற்றவாளிகள் ஆஜர்:
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால், இதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை சேலம் மத்திய சிறையில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர், அவர்கள் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றக் கதவுகள் அடைப்பு:
இதன் தொடர்ச்சியாக, காலை 10 மணிக்கு நீதிபதி நந்தினி தேவி, நீதிமன்றத்துக்கு வந்தார். பிறகு, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள், குற்றவாளிகள் தரப்பு வாதங்கள் என அனைத்தையும் அவர் மீண்டும் வாசித்தார். பிறகு, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களிடமும் அவர் சில கேள்விகளை எழுப்பினார். இந்த நடைமுறையின் போது, நீதிமன்ற கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. தொடர்்நது, இருதரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் தங்கள் இறுதி வாதங்களை எடுத்து வைத்தனர்.
குறைந்தபட்ச தண்டனை வழங்குக:
குற்றவாளிகளின் வயதை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், அப்பாவி மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்த அவர்களுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இவ்வழக்கில் குற்றம்சாட்ட அனைவரையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார். பின்னர், தண்டனை விவரங்கள் பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், பிற்பகல் 12.45 மணிக்கு நீதிபதி நந்தினி தேவி தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணமாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
