கைதாகலாம் என்ற அச்சத்தில் நாடு திரும்ப யோசிக்கும் பசில்..?
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டை விட்டுச் சென்ற பஸில் பிறகு நாடு திரும்பவில்லை.

பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஸ்தாபிப்பதில் ராஜபக்ச சகோதரர்களில் பசில் ராஜபக்சவுக்கு பெரும் பங்குண்டு. அவர் எதற்காக பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கினார் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
பண்டாரநாயக்க ஆரம்பித்த சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்க மகிந்த எப்போதும் விருப்பு கொண்டிருக்கவில்லை. சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சந்திரிக்காவால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே மகிந்த.
அதிலிருந்து மகிந்தவுக்கு சுதந்திர கட்சியின் மீது பிடிப்பு இருந்ததில்லை. ஆனால் அவரது தந்தை டி.ஏ.ராஜபக்ச சுதந்திர கட்சியில் தனது அரசியலை முன்னெடுத்தவர்.
தந்தை பண்டாரநாயக்க மனைவி சிறிமா பின்னர் மகள் சந்திரிகா என பரம்பரையாக வளர்ந்து வந்த கட்சியில் இருப்பதற்கு மகிந்தவுக்கு விருப்பமில்லாமல் போனது. அதை விட அவருக்கு புதிய கட்சியொன்றை உருவாக்குவதற்கு மைத்ரியும் காரணமாக இருந்தார்.
சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரமுகர் மைத்ரிபால சிறிசேன மகிந்தவின் பக்கமிருந்து ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் ரணில் பக்கம் தாவினார்.
அதன் பிறகே நல்லாட்சி அரசாங்கம் உருவாகி அவர் ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் மாறினர். இதையடுத்து பாரம்பரிய கட்சிகளையெல்லாம் இனி நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை என நினைத்த மகிந்த தனது சகோதரர் பசிலுடன் இணைந்த பல நகர்வுகளுக்குப்பின்னர் உருவானதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
நான்கு வருடங்களில் நல்லாட்சி ஆட்சி முடிவுக்கு வந்ததும் வீறு கொண்டு எழுந்தது பொதுஜன பெரமுன. கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியது
கட்சி. 69 இலட்சம் பேரின் ஆதரவோடு ஜனாதிபதியானார் கோட்டாபய. அதன் பிறகு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடியது கட்சி. இனி தம்மை அசைக்கவே முடியாது என்றும் இலங்கையின் எதிர்காலம் மொட்டு கட்சியின் கைகளிலேயே உள்ளது என அமெரிக்கா பறந்தார் பஸில். ஆனால் அனைத்துமே இரண்டு வருடங்களில் முடிவுக்கு வந்தது. கொவிட்டுக்கு அடுத்து அரகலய உருவாகி நாட்டை புரட்டிப்போட்டது.
கிட்டத்தட்ட ராஜபக்ச சகோதரர்களினதும் அவர்களின் வாரிசுகளினதும் அரசியல் முடிவுக்கு வந்து விட்டதாகவே அனைவரும் கருதினர்.
அதில் உண்மைகள் இல்லாமலில்லை. இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் அவர்களின் வாரிசான நாமல் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் ராஜபக்சவினர் மீதான கடந்த கால ஊழல்களை தோண்ட ஆரம்பித்திருக்கும் தேசிய மக்கள் சக்தியானது அவருக்கு ஒரு கிடுக்குப் பிடியை போட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டை விட்டுச் சென்ற பஸில் பிறகு நாடு திரும்பவில்லை.
அவர் ஒவ்வொரு முறையும் அமெரிக்கா சென்று நாடு திரும்பும் போது ஏதாவதொரு திட்டத்துடன் தான் வருவார் என்பதே மொட்டு கட்சியினரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஏனென்றால் கட்சியை கட்டியெழுப்ப அவர் அமெரிக்காவிலிருந்தே பல டீல்களை செய்பவர் என்ற பெருமை பெற்றவர்.
இந்நிலையில் அவர் நாடு திரும்பாவிட்டால் நாம் வரவழைத்து பார்ப்போம் என முடிவு செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2017 ஆம் ஆண்டு பஸிலோடு தொடர்புடைய ஒரு விவகாரத்தை தூசு தட்டியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு மாத்தறை பிரவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை ரூ.50 மில்லியனுக்கு வாங்கியது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு FCID அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பின்னர் வழக்கானது விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த 23 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ் வழக்கு தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது எனவும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார் என்றும் ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பஸில் அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்தமை உண்மையா பொய்யா என்பது குறித்து அவரது மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றம் தான் உறுதிப்படுத்த வேண்டும்.
ஆனால் பஸில் இலங்கை வந்தால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அவர் இவ்வாறு ஒரு கதையை சோடித்திருக்கலாம் என்ற பலராலும் பேசப்பட்டு வருகின்றது.
பஸில் அமெரிக்காவில் தலை மறைவாக இருக்கின்றார் என்ற கதைகளே பேசப்படுகின்றன. இதற்கு மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவும் பதில் அளித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷவுக்கு நாட்டுக்கு வரவுவதற்கு உரிமை இருக்கிறது. அவர் வரவில்லை எனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறுகின்றனர்.
வந்தால் எனக்கு உதவுவதற்காக வருவதாகக் கூறுகின்றனர். இவற்றில் எது சிறந்தது என்பதே தெரிந்து கொள்ள வேண்டிய காரணியாகும்.
அவர் நாட்டுக்கு வர வேண்டும். அரசாங்கத்தால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.சவால்களை எதிர்கொள்வதோடு அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும். அவர் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாமல் ராஜபக்ஷவுக்கோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பதிலளிக்க முடியாது என கடந்த வாரம் நாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எது எப்படியானாலும் பஸில் அமெரிக்காவிலிருந்து திரும்பினால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஏதாவதொரு திட்டத்துடனேயே திரும்புவார் என அநுரவும் சந்தேகித்திருக்கலாம்.
அவருக்கு அச்சத்தை ஏற்படுத்த அல்லது எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமலிருப்பதற்கு ஒரே வழி அவருக்கு நெருக்கடிகளை கொடுப்பது தான் என தேசிய மக்கள் சக்தியினர் கருதியிருக்கலாம்.
அதன் காரணமாகவே அவரின் மீதான பழைய வழக்கை தூசு தட்டியிருக்கலாம். மேலும் ஏற்கனவே பல வழக்குகளுக்கு முகங்கொடுத்துள்ள பஸில் நீதிமன்றத்தினால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த செப்டெம்பர் 24 இலிருந்து இவ்வருடம் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது.
எனவே அவரை நாட்டுக்கு வரவழைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி இந்த விவகாரத்தை கையாண்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எது எப்படியானாலும் நாட்டுக்கு வருவதற்கு பஸில் அச்சத்துடனேயே இருக்கின்றார் என்பது அவரது வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.