இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இரா. நல்ல கண்ணுக்கும் வயது 100!
.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) நூறாவது பிறந்தநாள்.
அவர் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது நூற்றாண்டு தொடக்க விழா. 'இப்படியொரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது' என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தன்னுடைய பிறந்தநாள் குறித்து எதுவும் பேசாமல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்தே அவர் அதிகம் பேசியதாகக் கூறுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லெனின்.
யார் இந்த நல்லகண்ணு? கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி மற்றும் போராட்டங்களில் அவரின் பங்களிப்பு என்ன?
சிறையும், போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை
இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் 'தோழர் ஆர்.என்.கே' என்ற அடைமொழியோடு அவரை அழைக்கின்றனர்.
அவரது நூற்றாண்டு விழாவை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வியாழன் அன்று அக்கட்சியினர் கொண்டாடியுள்ளனர்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பாரதியார், திரு.வி.கல்யாணசுந்தரம், விவேகானந்தர் ஆகியோரது படைப்புகளும் ஆசிரியர் பலவேசம் மூலமாகவே நல்லகண்ணுவுக்கு அறிமுகம் ஆகியுள்ளது.
பாரதியாரின் பாடல்களும் திரு.வி.கவின் எழுத்துகளும் தன்னை மாற்றியதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் அவருடன் நான் கலந்துரையாடியபோது கூறினார். "சாதிக் கட்டமைப்பை உடைப்பதும் சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதுவும்தான் தன்னுடைய லட்சியமாக இருந்தது" என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.
அதுகுறித்து நினைவுகூர்ந்த நல்லகண்ணு, "என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. '18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்' என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்" என்றார்.
"பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின்.