ஒரே மருத்துவமனையில் பல் சிகிச்சை செய்து கொண்ட 8 பேர் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி காரணம்!
பல் சிகிச்சைகாக பயன்படுத்தப்படும் பெரியோஸ்டீயல் லிஃப்ட் கருவியை அசுத்தமான நிலையில் மருத்துவர் பயன்படுத்தியதே 8 பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.

வாணியம்பாடியில் பல் சிகிச்சை மேற்கொண்ட 8 பேர் உயிரிழந்தற்கு பல் சிகிச்சையளிக்கும் கருவி சுகாதாரமில்லாமல் இருந்ததே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்:
வாணியம்பாடி கச்சேரி சாலையில் VTS டென்டல் கிளினிக் என்ற தனியார் பல் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு 1) இந்திராணி (நியூ டவுன் பகுதி) 2) வரதன் (நியூ டவுன் பகுதி) 3) சத்யா (அலசந்தாபுரம்) 4) நர்மதா (கோணாமேடு) 5) ஜெய்சிலி (பெருமாள் பேட்டை) 6) ஆபிசூர் ரகுமான் (பெரிய பேட்டை) 7) அனிதா உதயேந்திரம் 8) இளங்கோவன் (செங்கிலிகுப்பம்) ஆகியோர் உள்பட 10 பேர் பல் வலி சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவர் அறிவரசன் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெற்ற 10 பேரில் 8 பேர் 6 மாதத்திற்குள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அதில் கடைசியாக உயிரிழந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம் குமார், எனது தாய்க்கு பல் மருத்துவர் முறையாக சிகிச்சை அளிக்காததால்தான் உயிரிழந்தார் எனவும் இங்கு சிகிச்சை பெற்ற 8 பேரின் இறப்புக்கும் அவர்கள் மேற்கொண்ட சிகிச்சைதான் காரணம் என கூறி வாணியம்பாடி நகர காவல் நிலையம், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சருக்கு புகார் அளித்துள்ளார்.
ஆனால், இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், போராட்டத்தில் குதித்த ஸ்ரீராம் குமாரை இரண்டு முறை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஆய்வு:
இந்நிலையில், உயிரிழந்த 8 பேரும் ஒரே மாதிரி மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றான நியூரோமெலியோய்டோசிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தி லான்செட்டில் ஆய்வில் தெரியவந்துள்ளது. CMC வேலூர், ICMR-NIE மற்றும் தமிழ்நாடு பொதுச் சுகாதார இயக்குநரகம் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த மருத்துவர்கள் குழு இதுகுறித்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
பகீர் தகவல்:
பல் சிகிச்சைகாக பெரியோஸ்டீயல் லிஃப்ட் எனப்படும் கருவி பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட மருத்துவமனையில் அசுத்தமான நிலையில் இருந்த பெரியோஸ்டீயல் லிஃப்ட் கருவி பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அந்த அசுத்தமான கருவியில் இருந்த பாக்டீரியா சிகிச்சையின் வழியே மூளைக்குள் சென்று சிகிச்சை பெற்ற 10 பேரை தொற்றுக்குள்ளாக்கியது.
அதில் 8 பேர் நியூரோமெலியோய்டோசிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும், நியூரோமெலியோடோசிஸ் என்பது மெலியோடோசிஸின் நரம்பியல் சிக்கலாகும். இந்த நோய் தொற்று மத்திய மற்றும் புற நரம்பு மண்டலங்களை பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மண்டை நரம்பு வாதம், மூளை சீழ் பிடித்தல் ஆகிய அறிகுறிகள் தென்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அறிக்கை:
இந்நிலையில் இதுகுறித்து இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளையானது விளக்கம் அளித்துள்ளது. அதில், “சமூகத்தில் உள்ள எங்கள் பல் நிபுணர்கள், கருவிகளை கவனமாக கிருமி நீக்கம் செய்தல், பொருத்தமான இடங்களில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சுகாதாரமான மருத்துவ சூழல்களைப் பராமரித்தல் உள்ளிட்ட நிறுவப்பட்ட தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுகிறார்கள்.
இந்த நடவடிக்கைகள் நோயாளியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டவை. எங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள பல் மருத்துவமனைகள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மற்றும் தொழில்முறை பல் சங்கங்களால் வெளியிடப்பட்டவை.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தொற்று தடுப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றுகின்றன. இந்த நெறிமுறைகளில் விரிவான கிருமி நீக்க நடைமுறைகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) பயன்பாடு, மருத்துவ அமைப்புகளில் வழக்கமான கிருமி நீக்கம் மற்றும் மலட்டு மருத்துவப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
நியூரோமெலியோய்டோசிஸ் என்பது வெப்பமண்டலப் பகுதிகளில் மண் மற்றும் நீரில் பொதுவாகக் காணப்படும் பர்கோல்டேரியாப்சுடோமல்லேய் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் மத்திய நரம்பு மண்டலத்தின் அரிதான ஆனால் கடுமையான தொற்று ஆகும். இந்த நோய் மூளைக் கட்டிகள், மூளைக்காய்ச்சல் மற்றும் நரம்பியல் குறைபாடுகளாக வெளிப்படும். மேலும் இது இறப்புக்கான கணிசமான ஆபத்தைக் கொண்டுள்ளது.