தமிழகத்தில் உள்ள உலகின் மூன்றாவது மிக உயரமான முருகன் சிலை! எங்கே தெரியுமா?
வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயிலில் உலகின் மூன்றாவது மிக உயரமான முருகன் சிலை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயிலில் 92 அடி உயரத்தில் கட்டப்பட்ட முருகன் சிலைக்கு இன்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரிக்கு அருகே புதுவசூர் பகுதியில் ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் நடராஜ முதலியார் உள்ளிட்ட பல பக்தர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உதவியுடன் கோயில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது.
கோயிலின் அடிவாரம் வெங்கடபுரம் என்று அழைக்கப்படுகிறது. வரவேற்பு வளைவின் இடதுபுறத்திலிருந்து ஒரு வாகனம் செல்லும் காட் சாலையும் உள்ளது. இந்த சந்திப்பில் பிள்ளையாருக்கு ஒரு துணை சன்னதி மற்றும் நவக்கிரக உறை உள்ளது. படிகளின் இருபுறமும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட யானையின் இரண்டு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோயிலில் கந்த சஷ்டி திருவிழா போன்ற முக்கிய திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த தீர்த்தகிரி சுப்பிரமணியர் திருக்கோவில் அறங்காவல் குழு சார்பில் சுமார் 500 அடி உயரம் கொண்ட தீர்த்தகிரி மலை மீது, பீடத்துடன் சேர்த்து 92 அடி உயரத்தில் உலகின் மூன்றாவது மிக உயரமான முருகன் சிலை வடிவமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்த சிலையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நிகழ்வின் போது பல்வேறு நதிகளில் இருந்து புனித கொண்டுவரப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்களை முழங்கி மேளதாளங்களுடன் புனித நீரை டிரோன் மூலமாக எடுத்துச் சென்று 92 அடி உயரமுள்ள முருகர் மீது ஊற்றப்பட்டது.
இந்த விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும் அருகே உள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த முருகன் சிலையானது உலகின் மூன்றாவது உயரமான முருகன் சிலையாகும். முருகன் சிலை மீது டிரோன் மூலம் அபிஷேகம் நடைபெற்ற போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.
இந்த கும்பாபிஷேகம் விழாவில் எந்த விதமான அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.