'தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நாளை (ஜூன் 5) திரைக்கு வரும் 'தக் லைஃப்’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல சர்ச்சைகளுக்கு இடையே கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் மற்றும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ’தக் லைஃப்’ திரைப்படம் நாளை ஜூன் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தக் லைஃப் திரைப்படத்தை, சட்ட விரோதமாக செயல்படும் 793 இணைதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூன் 4) நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்கமல் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, “தக் லைஃப் திரைப்படம் 3,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
மிகப் பெரிய பட்ஜெட்டில் வெளியாக உள்ள நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானால் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு வர்த்தகரீதியாக மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தக் லைப் திரைப்படத்தை பிஎஸ்என்எல் உள்ளிட்ட இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், கேபிள் டிவி நிறுவனங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
இசை வெளியீட்டு விழா சர்ச்சை: முன்னதாக, ‘தக் லைஃப்’ இசை வெளியீடு விழாவில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு குரல்கள் வலுத்தன. தனது கருத்துக்காக கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க தவறினால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடுவதை தடுப்போம் என்றும் கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல்’ பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மொழி குறித்து பேசுவதற்கு நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? அல்லது வரலாற்று ஆய்வாளரா? தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என கூற உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? என கேள்விகள் எழுப்பியது. மேலும் மக்களின் மனம் புண்படும் வகையில் கமல் பேசி உள்ளார். யாராக இருந்தாலும் மக்கள் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என தெரிவித்திருந்தது. மேலும், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால், அவர் நடித்த 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் நாளை வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.