தற்போது நடப்பது கதிரைக்கான பேரம்பேசுதல்! சுமந்திரன் தெரிவிப்பு!
அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி ஆட்சியமைப்பதற்கு மற்ற கட்சிகள் உதவ வேண்டும் என்பதே தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கோட்பாடாகும்

தற்போது நடக்கின்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்ற கதிரைக்கான பேரம்பேசுதல் பற்றியதே. அதனை ஜ.த.தே.கூட்டணி செயலாளர் ரட்ணலிங்கம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களின் நலன்களை முன்நிறுத்தி பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதால் தேர்தலுக்கு முன்னரே அதனை செய்திருக்கலாம்.தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருக்கலாம்.என்று தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜ.த.தே.கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவைக்கு தொடர்பான ஒப்பந்தம் பற்றியும், குறித்த இரு தரப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என வவுனியாவில் ஊடகங்களுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.....
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய பேரவை ஆகிய இரண்டு தரப்பினருடனும் கடந்த நாட்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.
எந்த கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் இருக்கிறதோ அந்த கட்சி ஆட்சியமைப்பதற்கு மற்றைய கட்சிகள் உதவி புரியவேண்டும் என்பது எமது கோட்பாடு.இருதரப்பும் அந்த கோட்பாட்டை முழுமையாக ஏற்றிருந்தார்கள்.
ஆனால் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கு இப்படி அமைந்தால் ஒரு சபையில்மாத்திரமே தாங்கள் ஆட்சிஅமைக்க முடியும் என சொன்னார்கள்.
எனவே வேறு சில சபைகளிலும் நல்லெண்ண அடிப்படையில் தாங்கள் ஆட்சி அமைக்க உதவி செய்யுமாறு கேட்டார்கள். நாங்கள் அதை நிராகரிக்கவில்லை. அது குறித்து பேசியிருந்தோம். மாந்தை மேற்கில் அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டு ஆட்சியை சமனாக பகிர்வதாக இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக அறிகிறோம். ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் வவுனியாவில் வைத்து சில விடயங்களை சொல்லியிருக்கிறார். சபைகளில் தங்களுடைய நிர்வாகத்தை அமைக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருப்பதாக வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதற்கு நன்றிகள்.
தற்போது நடக்கின்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்பது பற்றியதே. தமிழ்மக்களின் நலன்களை முன்நிறுத்தி பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதன் மூலம் தேர்தலுக்கு முன்னரே அதனை செய்திருக்கலாம். இணைந்தும் போட்டியிட்டிருக்கலாம்.
தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிவிட்டு.. நாங்கள் இந்த இரு தரப்பையும் தாக்கவில்லை.
ஆனால் அவர்களில் சிலர் எங்களை தாக்குவதையே தொழிலாக கொண்டிருந்தார்கள். அதை செய்தார்கள். அனால் நாங்கள் பேரினவாதகட்சி இங்கு கால் பதித்துவிடக்கூடாது என்று அரசாங்க கட்சியை மும்முரமாக தாக்கியே பிரச்சாரத்தை நடத்தினோம்..
அந்தநிலையில் 35சபைகளில் நாங்கள் ஆட்சியமைக்கக்கூடிய அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளோம். அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி ஆட்சியமைப்பதற்கு மற்ற கட்சிகள் உதவ வேண்டும் என்பதே தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கோட்பாடாகும் அவர்கள் முன்னரே அறிவித்தார்கள்.
எனவே அந்த கோட்பாட்டின் படி அவர்கள் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்கிறோம்.
இணைந்து செயற்படுவது தொடர்பாக சந்தர்பங்களில் பேசலாம். தற்போது நடப்பது கதிரைக்கான பேரம் பேசுதல். அதனை திரு ரத்னலிங்கம் தெளிவாக சொல்லியிருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதில் கரிசனை காட்டவில்லை.
எனவே இணைந்து செயற்படுவதை விட இந்த சின்ன சின்ன கதிரை விடயங்களிலாவது உண்மைத்தன்மை இருக்கிறதா என்று முதலில் பார்போம். உண்மை இல்லாமல் கதிரை தான் முக்கியம் என எவரோடும் கூட்டு வைக்கலாம் என்று செயற்படுவார்கள் என்று இணைந்து செயற்படுவது தொடர்பாக நாங்களும் சிந்திக்க வேண்டியிருக்கும். என்றார்.