திமுக கூட்டணி நாட்டுக்குத் தேவை - கமல்ஹாசன் பளீச் பதில்!
முதலமைச்சர் அழைத்ததின் பேரில் அவரை இன்று சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, ராஜ்யசபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார்!

திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை. அதனால் இங்கு வந்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமை மூன்று இடங்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக திமுகவின் சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் வேட்பாளராக அறிவித்திருந்தது. மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமைஅறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் கூடி அதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்று தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அதன் பின்னர் அவர்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "முதலமைச்சர் அழைத்ததின் பேரில் அவரை இன்று சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, ராஜ்யசபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்றும், வேட்பு மனுத் தாக்கல் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்," எனவும் ஸ்டாலின் கூறினார்.
மேலும், "மாநிலங்களவையில் தான் என்னுடைய குரல் முதல்முறையாக ஒலிக்க இருந்தாலும், தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து தான் வருகிறேன்," என்றும் அவர் கூறினார்.
"தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய அவர், தான் பேசியது தவறு இல்லை என திட்டவட்டமாக கூறினார். அதேபோல், இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், என்னுடைய அன்பு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மக்களுக்கு புரியும்," என்றும் அவர் தெரிவித்தார்.
"ஏற்கெனவே நான் பல மிரட்டல்களை சந்தித்துள்ளதாகவும், இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது." என்று கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறினார்.
திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை; அதனால் இங்கு வந்துள்ளேன்." என்று கமல் பளீச்சென பதிலளித்தார்.