இல்லாத வீட்டுக்கு நட்டஈடு பெற்ற சமல் ராஜபக்ச ; கைதாகப்போகும் மகிந்தவின் அண்ணன்…
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு பிரதான காரணகர்த்தாக்களே ராஜபக்ச குடும்பத்தினர் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு பிரதான காரணகர்த்தாக்களே ராஜபக்ச குடும்பத்தினர் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இதன் காரணமாகவே அரகலய போராட்டம் உருவானது. அவர்களின் கடந்த கால செயற்பாடுகள், ஊழல் நடவடிக்கைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல தகவல்களை திரட்டி வருகின்றது.
இந்நிலையில் மகிந்த அரசாங்கத்தில் சபாநாயகராகவும் அசைக்க முடியாதவராக வலம் வந்தவர் குடும்பத்தின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச.
இவர் இலங்கை பொலிஸ் சேவையில் கடமையாற்றியவர். பின்பு மகிந்தவின் செல்வாக்கினால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சபாநாயகரானார்.
தனது மகன் சசீந்திர ராஜபக்சவை ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக்கி அழகு பார்த்தார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற அரகலய சம்பவங்களின் போது திஸ்ஸமகாராமவில் உள்ள தனது வீடு சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையானது என்ற விடயத்தை முன்வைத்த அவர் ஒரு கோடியே 52 இலட்சம் நட்ட ஈட்டை கோரியிருந்தார். பின்னர் அந்த நட்டஈடு அவருக்கு வழங்கப்பட்டது.
எனினும் அது குறித்த விசாரணைகள் பின்பு முடுக்கி விடப்பட்டபோது அவர் குறிப்பிட்ட இடத்தில் வீடுகளே இல்லையெனவும் அது ஒரு வயல் நிலமென்றும் உண்மைகள் வெளிவந்தன.
இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது குறித்த இடம் தனது பெயரில் இருப்பதாக அவர் ஒரு சத்திய கடதாசியை சமர்ப்பித்திருந்தார். ஆனால் மேலதிக விசாரணைகளின் போது குறித்த நிலமானது வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக பொய்யான ஆவணங்களை வழங்கியமை, பொய்யான தகவலை கூறி அரசாங்க பணத்தை நட்டஈடாக பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை முக்கிய விடயம்.
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது ஜூலை 2023 இல் வெளியிடப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில், அந்த வளாகத்தில் ரூ. 14.8 மில்லியன் மதிப்புள்ள வீடு இருப்பதாகவும், கிடங்கிற்கு ரூ. 222,600 சேதம் ஏற்பட்டதாகவும் சமல் தரப்பில் கூறப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டது.
பின்னர் பொது நிர்வாக அமைச்சானது இந்த தகவல் பொய் என்பதை உறுதி செய்தது. இந்த வழக்கில் தங்கள் அதிகார வரம்பின் கீழ் இழப்பீடு வழங்க முடியாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தது. ஆனால் அதற்கு முன்பதாகவே முழுமையான பணத்தொகை சமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டு விட்டது.
தற்போது இந்த சம்பவமானது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் (CIABOC) பணம் பெற்றமை தொடர்பில் ஆணைக்குழுவால் சமல் ராஜபக்ச விசாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மட்டுமின்றி உரிய தேடல் இன்றி அவருக்கு நட்டஈட்டு தொகையை வழங்குவதற்கு சிபாரிசு செய்த அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு அழுத்தங்களை கொடுத்த அரசியல்வாதிகளும் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்ச சகோதரர்களே காரணம் என்ற வகையில் உயர்நீதிமன்றமானது 2023 ஆண்டு ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தமையை இங்கு மீட்டு பார்த்தல் அவசியம்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்த்ரா ஜெயரட்ண, முன்னாள் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங், கொழும்பு திறந்த பல்கலைக்கழக பேராசிரியர் மஹிம் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் 2023 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதை விசாரித்த ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் நான்கு பேர், இந்த நெருக்கடிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய,முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச ,முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளராகவிருந்த பி.பி.ஜெயசுந்தர உள்ளிட்ட ஏழு நபர்களே பொறுப்பு என தீர்ப்பொன்றை அளித்திருந்தது.
அச்சந்தர்ப்பத்தில் எதிரணி அரசியல்வாதிகள் அனைவரும் ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் ‘பொருளாதார படுகொலையாளிகள்’ என வர்ணித்ததோடு அவர்களின் குடியுரிமை குறித்துநாடாளுமன்றத்தின் தீர்மானம் என்ன என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த பட்டியலில் அவர்களின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவும் இணைந்து கொள்ளப்போகின்றாரோ தெரியவில்லை.
மட்டுமின்றி இவரது மகன் சசீந்திர ராஜபக்சவும் கடந்த வாரம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் ஒன்றை வழங்கச் சென்றிருந்தார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் விளங்கிய போது அப்பிரதேசத்தின் காணிகள் மற்றும் சொத்துகளை ஆக்கிரமித்தமை தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன என்பது முக்கிய விடயம்.