வதைபட்ட மனைவி… உயிரிழந்த கணவர்…“பீரியட்ஸ்னு சொல்லியும் நிர்வாணமாக்கி அடிச்சாங்க…”
சிசிடிவி-யை முதல்லயே பார்த்துத்தானே மேடம் நீங்க விசாரிச்சிருக்கணும்…'இப்பிடில்லாம் என்கிட்ட பேசக் கூடாது. ஒழுங்காப் போயிடு’னு மிரட்டினார் சத்யா.

திருட்டு வழக்கு விசாரண என்ற பெயரில், பெண் ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் நிர்வாணமாகச் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவமும், அதன் தொடர்ச்சியாக அவரின் கணவர் உயிரிழந்த விவகாரமும் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
“செய்யாத தப்புக்காக என்னைய மாறி மாறி அடிச்சாங்க. பீரியட்ஸ்னு சொல்லியும்கூட நிர்வாணப்படுத்தி சித்ரவதை செஞ்சாங்க… அந்த மன உளைச்சல்ல என் கணவர் இறந்தே போயிட்டார்.
ஏழைன்னா என்ன வேணுமானாலும் செய்வாங்களா..?” எனக் குமுறுகிறார் அந்த பெண் ஊழியர். புதுச்சேரியைக் கலங்கடித்திருக்கும் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
புகாரளித்த கேரளத் தம்பதி… கண்டபடி தாக்கிய போலீஸ்!
புதுச்சேரி, புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) என்ற நட்சத்திர விடுதி.
சில தினங்களுக்கு முன்பு அங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திருந்த தங்க நகைகளைக் காணவில்லை என்று தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
அதனடிப்படையில், அந்த விடுதியில் பணிபுரிந்த கலையரசி உட்பட மூன்று பெண்களையும், இரண்டு ஆண்களையும் விசாரணைக்கு அழைத்த தவளக்குப்பம் போலீஸார், நள்ளிரவு வரை அவர்களைக் கண்டபடி அடித்து அனுப்பியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நடந்த ஒரு சில தினங்களில், கலையரசியின் கணவர் திடீரென மயங்கி உயிரிழந்துவிட, விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது.
பூரணாங்குப்பம் கிராமத்தில் இருக்கும் கலையரசியை சந்திக்கச் சென்றோம். கீற்றுகளையும் பேனர்களையும் மேற்கூரையாகக் கொண்டிருந்த குடிசைக்குள், இருளாய் அப்பிக்கிடக்கிறது அந்தக் குடும்பத்தின் வறுமை.
வீட்டுக்குள் (?!) தன் கணவர் அர்ஜுனனின் புகைப்படத்தை அணைத்தவாறு படுத்துக்கிடந்தார் கலையரசி. அவரிடம் பேசினோம்.
“லே பாண்டி ஹோட்டலில், அறைகளைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் பண்ணுறதுதான் என்னோட வேலை. கேரளாவுலருந்து வந்து ஹோட்டல்ல தங்கியிருந்த ஒரு தம்பதி, கடந்த மே 11-ம் தேதி மதியம் 12:30 மணிக்கு ரூமை காலி பண்ணிட்டுப் போனாங்க.
ஒரு மணி நேரத்துல திரும்பி வந்து, ரூம்ல கழட்டி வெச்சுருந்த அவங்களோட மூணு மோதிரத்தைக் காணோம்னு சொன்னாங்க.
உடனே, `ரூமைப் பெருக்கும்போது மோதிரம் இருந்துச்சா?’னு என்கிட்டயும், என்கூட வேலை செய்யுற நாலு பேர்கிட்டயும் மேனேஜர் சார் கேட்டாரு.
நாங்க பார்க்கலைன்னு சொல்லிட்டோம். அதுக்கப்புறம் தவளக்குப்பம் ஸ்டேஷன்ல இருந்து ரெண்டு போலீஸ்காரங்க வந்து, ரூமை செக் பண்ணிட்டுப் போனாங்க. எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கும் வரச் சொன்னாங்க.
“எனக்கு பீரியட்ஸ் மேடம்…” நிர்வாணமாக்கி அடித்த காவலர், சித்ரவதைக்குள்ளான பெண்!
போலீஸ் ஸ்டேஷன்ல, என்கூட வந்த ஒரு பொண்ணு உள்ளிட்ட நாலு பேரையும் உள்ள கூட்டிக்கிட்டுப் போய் அடிச்சாங்க.
என்னை கூப்பிட்ட எஸ்.ஐ சண்முக சத்யா, `நீதான் நகையை எடுத்துருக்க. ஒழுங்கா உண்மையை ஒத்துக்கிட்டு, அதைக் குடுத்துடு’னு சொன்னாங்க.
உடனே, ‘நான் எந்த நகையையும் எடுக்கலை மேடம். நாங்க ஏழைங்கதான். ஆனா, திருடங்க இல்லை’னு சொன்னேன்.
அதுக்கு, `திருடுன நகையைக் குடுடினு கேட்டா, உன் இஷ்டத்துக்குப் பேசுறியா’னு கேட்டு, லத்தியால முதுகுலயும் கால்லயும் கன்னா பின்னானு அடிக்க ஆரம்பிச்சாங்க.
பெண் காவலரான பிருந்தா என்பவரைக் கூப்பிட்ட எஸ்.ஐ சத்யா, ‘இவளைக் கூட்டிக்கிட்டுப் போய் அவுத்துட்டு செக் பண்ணு…’னு சொன்னார்.
என்னை மேல் மாடிக்கு கூட்டிக்கிட்டுப் போன பெண் காவலர் பிருந்தா, என் டிரெஸ்ஸையெல்லாம் அவுத்துட்டு, டிரெஸ்ஸை உதறச் சொன்னார்.
உள்ளாடைகளைக் கழட்டச் சொல்லவும், ‘எனக்கு பீரியட்ஸ் மேடம். நான் கழட்ட மாட்டேன்’னு சொன்னேன். ‘திருடுன நகையை அதுக்குள்ள வெச்சுருக்கியா… கழட்டுடி’னு சொன்னார் பிருந்தா. வேற வழியில்லாம கழட்டுனேன்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உடைந்து அழுதார் கலையரசி.
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தவர், “என்னோட டிரெஸ்ஸுல நகை ஏதும் ஒளிச்சு வெக்கப்படலைனு தெரிஞ்சுகிட்ட பெண் காவலர் பிருந்தா, ‘நகையை எங்கடி வெச்சுருக்க?’னு கேட்டு, என்னையக் குனிய வெச்சு அடிச்சார்.
உடம்புல ஒரு துணிகூட இல்லாம, நிர்வாணமாக்கி என்னை அடிச்சதை நினைச்சாலே இப்பவும் உடம்பெல்லாம் நடுங்குது.
‘நான் எந்தத் தப்பும் பண்ணலை மேடம்’னு சொல்லி நான் கதறவும், என் டிரெஸ்ஸைப் போட்டுக்கச் சொன்னார் பிருந்தா.
அடுத்ததாக, வசந்த்னு இன்னொரு ஆம்பளை போலீஸ் வந்து இன்னொரு ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போய், என் கையை நீட்டச் சொல்லி லத்தியால அடிச்சார்.
அவருக்கப்புறம், ஏ.எஸ்.ஐ குமார்னு ஒருத்தர் முட்டிபோடச் சொல்லி, என் உள்ளங்கால்லயும், கையிலயும் லத்தியால அடிச்சார்.
என்னால வலி தாங்க முடியலை. ‘நான் நகையை எடுக்கலை சார்’னு சொல்லி அவர் கால்ல விழுந்து அழுதேன்.
உடனே அவர் என் கன்னத்துல மாத்தி மாத்தி அடிச்சார். லத்தியால அடிச்சதால என் ரெண்டு கையும் வீங்கிடுச்சு.
உடனே வீக்கம் குறையுறதுக்காக, கையை சுவத்துல தட்டச் சொன்னாங்க. அப்படியும் வீக்கம் குறையலை. அதுக்கப்புறமும் என்னைய அடிக்கிறதை அவங்க விடலை. நைட் ஒரு மணிக்கு என்னைய வீட்டுக்கு அனுப்பும்போது, காலைல வரணும்னு சொன்னாங்க.
“நகையை நீ திருடலை…
மறுநாள் மே 12-ம் தேதி காலைல 7 மணிக்கு என் வீட்டுக்காரர் அர்ஜுனனைக் கூட்டிக்கிட்டு, ஸ்டேஷனுக்குப் போனேன்.
ஆனா, அன்னைக்கு முழுக்க எங்களை வெளியில நிக்க வெச்சு, நைட் 10 மணிக்கு எஸ்.ஐ சத்யா உள்ளே கூப்பிட்டாங்க. அப்போ, `
ஹோட்டலோட சிசிடிவி-யை செக் பண்ணோம். நீ எந்தத் தப்பும் பண்ணலை. நகை அவங்ககிட்டதான் இருக்காம். புகாரை வாபஸ் வாங்கிட்டாங்க. நீ வீட்டுக்குப் போகலாம்’னு சொன்னார் சத்யா.
அப்போ, ‘இந்த சிசிடிவி-யை முதல்லயே பார்த்துத்தானே மேடம் நீங்க விசாரிச்சிருக்கணும்… இப்பிடி அடிச்சு, திருட்டுப் பட்டம் கட்டிட்டீங்களே…’னு என் கணவர் கேட்டாரு.
அதுக்கு, `இப்பிடில்லாம் என்கிட்ட பேசக் கூடாது. ஒழுங்காப் போயிடு’னு மிரட்டினார் சத்யா.
என் மேலே என் கணவருக்குப் பாசம் அதிகம். செய்யாத தப்புக்கு இப்பிடி ஆயிடுச்சேனு, ரெண்டு நாளா அவர் சாப்பிடலை. இந்த நிலைமையிலதான் மே 14-ம் தேதி அவர் மயங்கி விழுந்துட்டாரு.
உடனே அவரை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். ரத்த அழுத்தம் அதிகமாகி, மூளையை பாதிச்சிடுச்சுனு டாக்டருங்க சொன்னாங்க.
23-ம் தேதி என் கணவர் இறந்துட்டாரு. போலீஸ்காரங்க குடுத்த மன உளைச்சலாலதான் என் கணவருக்கு ரத்த அழுத்தம் வந்து செத்துட்டாரு. எனக்கு நியாயம் கிடைக்கிற வரைக்கும் அவரோட உடலை நான் வாங்கப்போறதில்லை…” என்றார் கலங்கிய கண்களுடன்.
“ஏழைகள் என்றால் இளக்காரமா..
இந்த விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்திருப்பதால், அதன் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாங்கத்திடம் பேசினோம். “எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், எஸ்.ஐ சத்யா உள்ளிட்ட போலீஸார் இந்தப் பெண்களைக் கொடூரமாகச் சித்ரவதை செய்திருக்கிறார்கள்.
பெண்களை விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து விதிகளையும் அப்பட்டமாக மீறியிருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகவே கலையரசியின் கணவர் அர்ஜுனன் உயிரிழந்திருக்கிறார்.
ஏழைகள் என்றால் இளக்காரமா… சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யும் வரை நாங்கள் விடப்போவதில்லை” என்கிறார்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனிடம் கேட்டபோது, “அந்தப் புகாரை காவல்துறை தலைமைக்கு அனுப்பிவைத்திருக்கிறேன். அதன்மீது விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” என்றார்.
இறுதியாக சீனியர் எஸ்.பி கலைவாணனிடம் கேட்டபோது, “கலையரசி கொடுத்திருக்கும் புகார்மீது, போலீஸ் ஆஃப் போலீஸ் (காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்கும் காவல் பிரிவு) மூலம் விசாரணை நடத்திவருகிறோம்.
அந்த விசாரணையின் முடிவில் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருக்கிறார் எஸ்.ஐ சண்முக சத்யா.
துறைரீதியிலான நடவடிக்கை என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்துவதை நிறுத்திவிட்டு, நியாயத்தின் பக்கம் புதுச்சேரி போலீஸ் நிற்க வேண்டும். பாதிக்கப்பட்ட கலையரசிக்கு உரிய நியாயம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
நிர்வாணப்படுத்தப்பட்டது, அந்தப் பெண்கள் மட்டுமல்ல, மனிதநேயமும் மனித உரிமையும்தான். வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!