புதிய விமானமும் பழைய ஊழல்களும்
பிரான்ஸின் தலைநகர் பரிஸிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்ட விமானம் புதன்கிழமை காலை இலங்கை வான்பரப்பை வந்தடைந்தது.

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுடன் புதிதாக இணைந்துள்ள எயார் பஸ் ரக விமானம் கடந்த புதன்கிழமை (4) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
பிரான்ஸின் தலைநகர் பரிஸிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்ட அவ்விமானம் புதன்கிழமை காலை இலங்கை வான்பரப்பை வந்தடைந்தது.
வடமேற்கு திசையிலிருந்து இலங்கைக்கு வந்த அவ்விமானத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு முன்னர், அதை மேலும் தெற்கு நோக்கி பாணந்துறை வரை பறக்கச் செய்து பின்னர் சுமார் 1500 அடி உயரத்தில் தாழ்வாக கொழும்பு வரை கரையோரமாக பறக்கச் செய்தது அரசாங்கம்.
தாழ்வாகப் பறந்த அவ்விமானத்தை கண்டு களிப்பதற்கும் படம் பிடிப்பதற்கும் மக்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. காலிமுகத்திடல் உட்பட கடற்கரையோரமாகவும் உயர்ந்த கட்டடங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையான மக்கள் அவ்விமானத்தை பார்வையிட்டனர்.
அதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் ஒரு விமானத்தை இணைப்பது என்ன சாதனையா, இதற்குமுன் இவ்வாறு விமானம் கொண்டு வரப்படவில்லையா எதற்காக இந்த கொண்டாட்டம்? என எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பலர் உட்பட மற்றொரு தரப்பினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இவ்விமானம் புத்தம் புதிய விமானம் அல்ல, அது சொந்தமாக அல்லாமல் குத்தகைக்கே பெறப்பட்டுள்ளது, இந்நிலையில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது என்பதும் அவர்களின் கேள்வியாகும்.
பிரான்ஸை தளமாகக் கொண்ட ‘எயார்பஸ்’ எனும் விமானத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஏ330-–200 ரகத்தைச் சேர்ந்த விமானமே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் புதிதாக இணைக்கப்பட்டது. அகன்ற உடலமைப்புடைய இவ்விமானத்தை மத்திய தூர மற்றும் நீண்ட தூர சேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். 260 பயணிகள் இவ்விமானத்தில் பயணிக்க முடியும்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் தற்போது புதிதாக இணைந்த விமானத்துடன் நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற எயார்பஸ் ஏ330 ரகத்தைச் சேர்ந்த 10 விமானங்களும், குறுகிய உடலமைப்புடைய, மத்திய தூர பயணத்துக்கு ஏற்ற எயார்பஸ் ஏ320 மற்றும் ஏ321 ரகங்களைச் சேர்ந்த 13 விமானங்கள் உட்பட மொத்தமாக 23 விமானங்கள் உள்ளன. இவை அனைத்துமே குத்தகை அடிப்படையில் பெறப்பட்டவையாகும்.
இதற்குமுன் அகன்ற உடலமைப்புடைய ஏ330-–200 ரக விமானமொன்று இறுதியாக 2018 ஆம் ஆண்டிலேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இணைக்கப்பட்டிருந்தது.
இம்மாத மத்தியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மேற்படி விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சேவையில் இணைப்பதற்கு சுமார் 10 நாட்கள் தேவைப்படலாம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத் தலைவர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார்.
புதிதாக எயார் பஸ் ரக விமானம் இணைக்கப்பட்டமை இந்நிறுவனத்துக்கு ஒரு மைல் கல் எனவும், இவ்வருட இறுதிக்குள் மேலும் இரு விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக பல தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய விமான சேவை ஏன் தேவை?
ஒரு தேசிய விமான சேவை நிறுவனமானது குறித்த நாட்டின் பெருமையை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஊக்குவிக்கும் ஒன்றாகும். அதைவிட சுற்றுலா, வர்த்தகம் போன்றவற்றுக்கு தேசிய விமான சேவை நிறுவனம் முக்கியமானது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இத்தகைய நிறுவனம் இருப்பதானது, போக்குவரத்து உட்கட்டமைப்பு, தேசிய பாதுகாப்பு போன்றவற்றுக்கு அனுகூலமாகும். கொவிட் போன்ற பெருந்தொற்று பரவல்களின்போது மக்களை நாட்டுக்கு அழைத்து வருதல், அவசரநிலை பதிலளிப்புகள், இராஜதந்திர தேவைகள் போன்றவற்றுக்கும் இது உதவும்.
இலங்கை நீண்ட காலமாகவே தனது பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையில் அதிக கவனம் செலுத்துகிறது. ஒரு தீவு நாடான இலங்கை விமானப் பயணங்களிலேயே அதிகம் தங்கியுள்ளது. சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஏற்றுமதி நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு விமான சேவைகள் முக்கியமானவை. இதில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பெரும்பங்காற்றுகிறது.
ஊழலும் நஷ்டமும்
ஆனால், கடந்த காலங்களில் தவறான முகாமைத்துவம், தவறான அரசியல் தலையீடுகள் மற்றும் ஊழல்களின் விளைவாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டது.
யுத்தத்தின் பின் 2013 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இலாபமீட்ட ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்ந்தும் நஷ்டத்தையே எதிர்கொண்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் ஏ350 ரகத்தின் 4 விமானங்களையும் ஏ330 ரகத்தின் 6 விமானங்களையும் கொள்வனவு செய்வதற்கு 2013 ஆம் ஆண்டு கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்விமானங்கள் இலங்கைக்கு வரவில்லை.
இவ்விமானக் கொள்வனவு முயற்சிகளில் ஊழல் இடம்பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டது. சந்தைப் பெறுமதியை விட அதிக விலைக்கு விமானங்களை வாங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
2020 முற்பகுதியில் சந்திரசேனவும் அவரின் மனைவியும் கைதாகி பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கபில சந்திரசேனவும் அவரின் குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அரசு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டின் பின் முதல் தடவையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 2023 டிசம்பரிலும் 2024 ஜூனிலும் ஏ320 ரகத்திலான இரு விமானங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இணைக்கப்பட்டிருந்தன.
கடந்த வருட முற்பகுதியில், ஏ330 ரகத்திலான 4 விமானங்களை குத்தகை அப்படையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இணைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அனுமதி அளித்தது.
விமானமொன்றுக்கு மாதாந்தம் 360,000 டொலர் அடிப்படையில் இரு விமானங்கைள 6 வருடங்களுக்கு ஒரிக்ஸ் ஏவியேசன் நிறுவனத்துக்கு ஊடாக குத்தகைக்குப் பெறுவதற்கும், விமானமொன்றுக்கு மாதாந்தம் 365,000 டொலர்கள் அடிப்படையில் இரு விமானங்களை 8 வருட காலத்துக்கு ஏர்கோ கெப்பிட்டல் நிறுவனத்துக்கு ஊடாக குத்தகைக்குப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார். தற்போது மேற்படி ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை நட்டத்தில் இயங்கி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கும் அப்போதைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
ஆனால், கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் மேற்படி நிறுவனத்தை விற்பனை செய்யும் முந்தைய அரசாங்கத்தின் திட்டத்தை கைவிடுவதாக புதிய அரசாங்கம் அறிவித்தது.
சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அரசின் வசம் இருக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.
நிறுவனத்தின் கடன்களை தீர்ப்பதற்காக , 20,000 கோடி ரூபாவை கடந்த வரவு–செலவுத்திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கியது. அத்துடன், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் சுற்றுலாத்துறை மூலம் 10 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கு இலங்கை இலக்கு வைத்துள்ள நிலையில், 5 வருடங்களில் அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 52 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது.
23 ஆவது விமானம்
இந்நிலையிலேயே அந்நிறுவனத்துக்கான 23 ஆவது விமானம் கடந்த புதன்கிழமை நாட்டை வந்தடைந்தது.
242 சிக்கன வகுப்புப் பயணிகள் ஆசனங்கள் மற்றும் 18 வர்த்தக வகுப்பு ஆசனங்கள் உட்பட 260 ஆசனங்களைக் கொண்ட இவ்விமானம் ஒரே தடவையில் சுமார் 13,400 கிலோமீற்றர் தூரம் பறக்கக்கூடியது. இதனால் இலங்கையிலிருந்து லண்டன், பிராங்க்போர்ட் (ஜேர்மனி), மெல்பேர்ன் (அவுஸ்திரேலியா) போன்ற இடங்களுக்கான நேரடி விமான சேவைகளை நடத்துவதற்கு இவ்விமானத்தை பயன்படுத்த முடியும்.
‘வயதும் அனுபவமும்’
4R–-ALT என்ற அடையாளத்தைக் கொண்ட இவ்விமானம் 2011 ஒக்டோபரில் முதல் தவையாக பறந்தது. இந்தோனேஷியாவின் கருடா எயார்லைன்ஸில் 2011 ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட இவ்விமானம், 2022 முதல் 2023 மே வரை தென் கொரியாவின் பிளை கங்வோன் நிறுவனத்தில் இணைந்திருந்தது. இவ்விமானம் 14 வருடம் பழைமையானது என்பது குறித்து சிலர் விமர்சிக்கின்றனர்.
ஆனால், விமானங்களைப் பொறுத்தவரை 14 வருடங்கள் என்பது அவ்வளவு பழைமையானதல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். பராமரிப்பிலும் அதன் திறன் தங்கியுள்ளது. கனடாவின் ‘நோலைனர் ஏவியேசன்’ விமான சேவை நிறுவனத்திலுள்ள போயிங் 737–-200 ரக விமானமொன்று 1974 ஆம் ஆண்டு முதல் 50 வருடங்களுக்கு மேலாக இன்னும் சேவையில் உள்ளது.
‘இத்தகைய விமானங்களை நாம் வயதுபோன விமானங்கள் எனக் கூற விரும்புவதில்லை. அவை அனுபவம் மிக்க விமானங்கள் என்றே நாம் கூறுகிறோம்’ என நோலைனர் ஏவியேசன் நிறுவனத் தலைவர் மார்கோ புரூட்ஹோம் கூறியுள்ளார்.
வராத விமானத்துக்கு 800,000 டொலர்
இலங்கைப் பாராளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த விமானம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை என்றபோதிலும், மிகவும் நல்ல முறையில் சீரமைத்தே அதை கொண்டு வந்திருக்கிறோம் விமானத்தின் தரம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
புதிதாக கொண்டுவரப்பட்ட விமானத்துக்காக மாதாந்தம் 275,000 டொலர் குத்தகை செலுத்தப்பட வேண்டுமெனவும், ஆனால், முந்தைய நிர்வாக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடியான ஒப்பந்தம் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு விநியோகிக்கவேபடாத விமானத்துக்கான ஒப்பந்தத்தினால் மாதாந்தம் 800,000 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
இதேவேளை கடந்த 5 ஆம் திகதி கொழும்பிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் யூஎல் 306 எனும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்விமானம் இந்தோனேஷியாவின் மேடான் நகரிலுள்ள விமான நிலையத்தில் அவசரமாக தறையிறக்கப்பட்டது.
இதனால் அவ்விமானத்திலிருந்த பயணிகள் பெரும் நெருக்கடிக்குள்ளானார்கள். பின்னர் மேற்படி பயணிகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல். 302 எனும் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டது.
ஆனால் சமூக வலைதளங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் புதிதாக இணைக்கப்பட்ட விமானத்தின் முதல் பயணத்திலேயே கோளாறு ஏற்பட்டு விட்டதா என்ற ரீதியில் விஷமத்தனமாக பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் இந்தோனேஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட யூ.எல்306 விமானமானது புதிதாக இணைக்கப்பட்ட விமானமல்ல. அது ஏ321 ரகத்தைச் சேர்ந்த வேறொரு விமானமாகும்.
-ஆர்.சேதுராமன்-