தமிழ் அரசியல்வாதிகள் தையிட்டி விகாரை வைத்து நாடகமாடுகின்றனராம்?
நீங்கள் ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன கந்தசாமி பிரபு?

வடக்கு கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக தையிட்டி விகாரை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்தி குழப்புகின்ற செயற்பாட்டு அரசியல் நாடகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் புதன்கிழமை (11) பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் ஒருங்கமைப்பில் புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்புக்காக பல தரப்பட்ட குழப்புகின்ற செயற்பாட்டை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தி வருகின்றனர்.
விசேடமாக தையிட்டி விகாரை தொடர்பான குழப்ப நிலையை அவதானித்து பார்த்தால் குறிப்பிட்ட தினமான போயா தினத்தில் மட்டும் அந்த விகாரை தொடர்பான ஞாபகம் ஏற்படுகின்றது. அதை கொண்டு இன்று மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் அரசியல் வாதிகள் தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக இந்த அரசியல் நாடகங்களை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இன மத மொழ கடந்து எந்தவொரு வேறுபாடுகள் இன்றி அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்
இந்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையர்கள் என எண்ணி செயற்படுகின்றோம். எங்களது ஜனாதிபதியின் கருது கோலும் அதுதான் நாட்டு மக்கள் அனைவரும் சமன். அவர்களின் வாழ்வை ஒளியேற்ற வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம் என்றார்.