வாக்குறுதியளித்த முறைமையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்!
323 சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் என்பதை தெரியாமலா விடுவிக்கப்பட்டுள்ளது!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. ஜனாதிபதிக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தெரியாமல் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். துறைமுகத்தில் இருந்து 323 சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் கூட விடுவிக்கப்பட்டுள்ளன. முறைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்படுவது குறித்துக் கூட ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளும் அறியாதிருக்கும் சந்தர்ப்பத்தில், கொள்கலன் விடுவிப்புக்கு எங்ஙகனம் பொறுப்புக்கூற முடியும்? 323 சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் என்பதை தெரியாமலா விடுவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பிரச்சினை எழுந்துள்ளது. இந்தக் கொள்கலன்களில் உள்ள பொருட்களுக்கு யார் பொறுப்பு என்பதை வெளிக்கொணர வேண்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சிரேஷ்ட பிரஜைகளினது சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தையும் இந்த அரசாங்கம் அதிகரிக்கவில்லை. சகல அரசாங்கங்களும் இவர்களினது சேமிப்புகளுக்கான 15% வட்டியை வழங்கியுள்ளன. ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் அது கிடைக்காது போயுள்ளது. இங்கும் முறைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யும், மோசடியும் ஏமாற்றுமே நடந்து வருகின்றன. முறைமையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் எதிர்பார்த்த முறைமையில் மாற்றம் இதுவல்ல. ஆனபடியால் இப்போதாவது நாட்டு மக்களை ஏமாற்றுவதை விடுத்து, யதார்த்தமாக நடந்து கொள்ளுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.