பொருளாதார பொறுப்புக்கூறலில் இருந்து போர்க்கால பொறுப்புக்கூறலுக்கு!
பயங்கரமான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான அனுபவங்களை அவர்களினால் அலட்சியம் செய்ய முடியாது.
பாராளுமன்ற தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணை முறைமை மாற்றத்துக்கானது. பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்தவர்களின் பிரதான எதிர்பார்ப்பு. நீண்ட உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களும் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள சகோதரத்துவ குடிமக்களுடன் சேர்ந்து தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பல தசாப்தங்களாக தாங்கள் அனுபவித்த பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதற்காகவும் வாக்களித்தார்கள்.
ஒரு வழியில் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியில் இருந்து வளங்களை அபகரித்த ஊழலைக் குறைப்பதன் மூலமாக பொருளாதார மேம்பாட்டை அடையலாம் என்று நினைத்தார்கள். ஊழல் மோசடிகள், முறைகேடுகள் இன்றி தூய்மையாக ஆட்சி செய்வது, ஊழல் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பது, கொளளையடிக்கப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்டுக் கொண்டுவருவது ஆகியனவே தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகள். ஆனால், அவ்வாறு அந்த பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்கு குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்படவில்லை அரசாங்கத்தின் மீதான பொதுவான விமர்சனம் அதிகரித்து வருகின்றது.
அண்மைய சில வாரங்களாக, முன்னைய அரசாங்கங்களில் உறுப்பினர்களாக இருந்த ஊழல் மோசடிகளால் ஈடுபட்டதாக நம்பப்படும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக கைதுசெய்ப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் செய்ததாக நம்பப்படுகின்றதை விடவும் சிறியளவிலான குற்றச்செயல்களுக்காகவே குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் அத்தியாவசியமான வரிகளைச் செலுத்தாமல் வாகனங்களை கொள்வனவு செய்ததை, பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வெளியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்க நிதியை பயன்படுத்தியமை போன்ற குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டார்கள்.
சில வழக்குகளில், அவர்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட வகையிலான பாரிய ஊழலுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாகத் தோன்றுகின்ற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவும் கடுமையான தண்டனைகளை நீதித்துறை விதித்திருக்கிறது. இது சட்ட மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தைக் குறித்து நிற்கிறது.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்ற கோடிக்கணக்கான டொலர்களை அரசாங்கத்தினால் எவ்வாறு மீட்டுக் கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்பதற்கான அறிகுறி எதையும் தற்சமயம் காணமுடியவில்லை. உடைமைகள், ஆடம்பர வாகனங்கள், அடையாளம் காணப்பட்ட அரசியல்வாதிகளினால் அவர்களது உத்தியோகபூர்வ சம்பாத்தியத்தியத்துக்கு விகிதப் பொருத்தமில்லாத வகையில் கொள்வனவு செயாயப்பட்ட நிலங்கள் போன்ற உள்நாட்டுச் சொத்துக்களை கண்டுபிடிப்பதிலேயே இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் விசாசணைகள் கவனத்தைக் குவித்திருக்கின்றன.
ஆனால், உண்மையில் இடம்பெற்றதாக நம்பப்பட்ட ஊழலையும் விட சிறியதாக இருந்தாலும் அவற்றைச் செய்தவர்களை கண்டுபிடிப்பதில் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் சுறுசுறுப்பாக செயற்படுகின்றமை அரசாங்கத்தின் பற்றுறுதியில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
வடக்கு, கிழக்கு
நீண்டகால உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவர்கள் தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய " முறைமை மாற்றத்திற்காக " நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்கின்ற மக்களுடன் சேர்ந்து வாக்களித்தார்கள். இதற்கு மேலதிகமாக, அரசியலில் புதிய முகமான தேசிய மக்கள் சக்தி தங்களுக்கு தங்களது உரிமைகளையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் வாக்களித்தார்கள்.
பிழைத்து வாழ்ந்து முன்னேறுவதற்கு அவர்களுக்கு வளங்கள் எந்தளவுக்கு தேவையோ அதைப் போன்றே போர்காலத்தில் இடம்பெற்ற பயங்கரமான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான அனுபவங்களை அவர்களினால் அலட்சியம் செய்ய முடியாது. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்ந்தாலும் சரி, வெளியில் வாழ்ந்தாலும் சரி, போரையும் அதன் விளைவான இழப்புக்களை அனுபவித்தவர்களை பழைய சம்பவங்கள் தொடர்ந்து அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும்.
பதினாறு வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்திருந்தாலும் கூட, காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்கள் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்காக இன்னமும் காத்திருக்கின்றார்கள். தங்களது அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனபதை தெரிந்துகொள்ளாத நிலையில், ஆட்கள் காணாமல்போகச் செய்யப்பட்ட அந்த சம்பவங்கள் முழுச் சமூகங்களையுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கும். அத்தகைய நிலைவரம் நல்லிணக்கத்துக்கான நாட்டின் முயற்சிகளை மலினப்படுத்தும்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அதற்கு ஒரு உதாரணமாகும். சாட்சியங்களின் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழக முகாமில் 1990 செப்டெம்பர் 5 ஆம் திகதி இராணுவத்தினால் 158 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி எதுவும் தெரியாது.
அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அக்கறைகளில் இருந்து கவனத்தை திருப்பும் நடவடிக்கைகளிலேயே நாட்டம் காட்டி வந்திருக்கின்றன. கடந்த காலத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. முன்னைய அரசாங்கங்களின் உயர்மட்ட தலைவர்களில் பலர் தாங்களே போரில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஜனாதிபதிகள் பாதுகாப்பு அமைச்சராகவும் ஆயுதப்படைகளின் பிரதம தளபதியாகவும் இருந்தார்கள்.
கடந்த காலத்தில் உண்மையில் நடந்தவை பற்றிய வேதனையானதும் சர்ச்சைக்குரியதுமான விவகாரங்களை கையாள்வதில் பெரும்பான்மைச் சமூகத்துக்கு அக்கறை இல்லாமல் இருப்பது இரண்டாவது பிரச்சினை. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை, அமைதியும் வழமைநிலையும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரு எளிமையான நம்பிக்கையுடனேயே அவர்கள் இருக்கிறார்கள்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, போர்க்காலத்தில் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தில்லை என்பதால் அதன் கீழ் கடந்த காலத்தைக் ஒரு கையாளக்கூடிய நிலைபேறான தீர்வொன்றை காண்பது சாத்தியமாகக் கூடியதாகும். ஆனால், அதற்கு கடந்த காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான அரசியல் துணிவாற்றலும் பற்றுறுதியும் அவசியமாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கூட, முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வருகின்றன. இது பல தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளின் பாணியை பிரதிபலிப்பவையாக அமைகின்றன. இத்தகைய நிலைவரம் போரின் தர்க்கம் உண்மையில் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை மாத்திரமல்ல, அதன் வடிவம் மாற்றப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது.
வெளிப்படையான மோதலுக்கு பதிலாக, இப்போது காணிகளை திருப்பிக் கையளித்தலில் உயர் அதிகாரிகள் மற்றும் நிருவாக மட்டங்களில் காணப்படும் தாமதம், சட்டங்களை பாகுபாடான முறையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் தீர்மானங்களை எடுப்பதில் மத்தியமய செயன்முறைகள் ஊடாக உள்ளூர்ச் சுயாட்சியை படிப்படாயாக திணறடித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடைசி ஆணைக்குழு
பதினாறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட முறை தொடர்பிலான சர்வதேச கரிசனை தொடர்ந்தும் உயர்வாகவே இருந்துவருகிறது. இலங்கையின் போர்களத்தில் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் செய்தவர்கள் அவற்றை எவ்வாறு செய்தார்கள், செய்வதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது இலங்கையில் இடம்பெற்றதை விடவும் மோசமான மீறல்கள் இடம்பெற்ற உலகின் வேறு பாகங்களுக்கும் பாடங்களாக அமையக்கூடும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேர்க் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை நாட்டின் நற்பெயருக்கு ஒரு அச்சுறுத்தலாக அல்லது ஒரு சுமையாக நோக்குவதற்கு பதிலாக, உலகிற்கு ஒரு வகைமாதிரியாக அமையக்கூடியதாக சரவதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பாக அரசாங்கம் நோக்கலாம். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டை அவலத்துக்கு உள்ளாக்கிய இன, மதப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என்பதையே " முறைமை மாற்றத்துக்கான " மக்களின் ஆணையும் உணர்த்துகிறது.
பொருளாதார குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் பின்பற்றுகின்ற அதே தந்திரோபாயத்தை அரசாங்கம் இது விடயத்திலும் பின்பற்ற முடியும். சுயாதீனமான அரச நிறுவனங்கள் ஊடாக செயற்பட அனுமதிக்கப்பட்டால் நீதியை நிலைநாட்டுவதற்கு வலிமையான கருவிகளாக அமையக்கூடிய வழமையான சட்டங்களையே அரசாங்கம் பயன்படுத்தவும் முடியும். மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்களை பொறுத்தவரை, அவற்றைக் கையாளுவதற்கென்ற அமைக்கப்பட்ட நிறுவனங்கள் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்ட " வகை மாதிரியான" ( Emblematic cases ) வழக்குகளை கையாளமுடியும்.
இந்த வழக்குகள் பல தசாப்தங்களாக பொதுவெளியில் அறியப்பட்டிருக்கும் மனித உரிமைமீறல்கள் அல்லது போர்க்கால துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவையாகும். உதாரணமாக, திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்( 2006), மூதூரில் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் பதினேழு உதவிப்பணியாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 2006), ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் (2010 ) ஆகியவற்றை கூறலாம்.
போருடன் சம்பந்தப்பட்ட முன்னைய சகல ஆணைக் குழுக்களினதும் அறிக்கைகளை ஆராய்வதற்காக 2021 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவே போர் விவகாரங்களை ஆராய்ந்த கடைசி ஆணைக்குழுவாகும். " வகைமாதிரியான வழக்குகளை " விசாரணை செய்வதை முதற்பணியாகக் கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமக்கப்பட வேண்டும் என்று நவாஸ் ஆணைக்குழு சிபாரிசு செய்தது.
அத்தகைய ஒரு நடவடிக்கை போரில் பாதிக்கப்பட்ட மக்கள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்தின் அக்கறை தொடர்பில் நம்பிக்கையை கட்டியெழுப்பும். பொருளாதார ஊழல்கள் பொறுத்துக் கொள்ளப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் மாற்றியமைக்கப்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவைப் போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் கடந்த காலத்துக்கு ஒரு முடிவைக் கட்டவும் தேசிய அபிவிருத்திக்காக சேர்ந்து பாடுபடுவதற்காக மக்களையும் சமூகங்களையும் ஐக்கியப்படுத்தவும் உதவ முடியும்.
கலாநிதி ஜெகான் பெரேரா