நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஏன் ஒதுக்கக்கூடாது? - உச்ச நீதிமன்றம் கேள்வி
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஏன் ஒதுக்கக்கூடாது என்று பதில் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்சியான நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில், அச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும், கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதாக நாம் தமிழர் கட்சி சார்பில் வாதிடப்பட்டது. தற்போது மற்றொரு அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி இருப்பது ஏற்புடையது அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் முறையிடப்பட்டது.