Breaking News
ஊடகவியலாளர்களுக்கு காவற்துறையினர் தடையேற்படுத்தினர்!
,

செம்மணி மனிதப் புதைகுழியினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் பார்வையிடுவதனை ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிட காவற்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேற்றைய தினம் (25.06.25) யாழ்ப்பாணம் வருகை தந்து செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனை செய்தி அறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் சென்ற போது , அதற்கு பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.
புதைகுழி காணப்படும் இடத்திற்கு சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முன்பாகவே ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என கூறி இருந்தனர்.
எதற்காக அனுமதியில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மேலிடத்து உத்தரவு என அங்கிருந்த பொலிஸார் பதிலளித்திருந்தனர்.
செம்மணி புதைகுழியினை நேரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் பார்வையிடும் ஒளிப்படங்கள் , காணொளிகள் வெளிவருவதை தடுக்கும் நோக்குடனையே பொலிஸார் அவ்வாறு செயற்பட்டனர் என குற்றம்சாட்டப்படுகிறது