நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த்-ஐ, ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார்(38) மற்றும் மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜான்(38) ஆகிய இருவரையும், ‘கொகைகன்’ எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காகக் கைது செய்த போலீசார், அவர்களின் இருந்து 11 கிராம் கொகைன் பொருளையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரதீப் குமாரும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாத் என்பவரும் நண்பர்கள் என்பதும், பிரதீப் குமார் நைஜீரியாவை சேர்ந்த ஜீரிக், கானாவை சேர்ந்த ஜான் ஆகியோரிடம் போதைப்பொருளை வாங்கி, பிரசாத் உள்ளிட்ட சென்னையில் பலரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. தற்போது பிரதீப் குமார், ஜான் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஜீரிக் உள்ளிட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ஜானிடன் நடத்திய விசாரணையில், பல்வேறு நடிகர், நடிகைகளுக்கும் விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் போதைப்பொருள் யாருக்கெல்லாம் சப்ளை செய்யப்பட்டது என்ற விவரம் கிடைத்தது. அந்த பட்டியலில், நடிகர் ஸ்ரீகாந்த் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதனால், நேற்று (ஜூன் 23) ஸ்ரீகாந்தை அழைத்து வந்த நுங்கம்பாக்கம் போதைப்பொருள் நுண்ணறிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஸ்ரீகாந்த் ‘நான் போதைப் பொருள் பயன்படுத்தியதே இல்லை’ என வாதம் செய்துள்ளார். அதனால், அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அதுமட்டுமின்றி, வள்ளுவர் கோட்டம் அருகே லேக் ஏரியாவில் உள்ள ஸ்ரீகாந்த் வீட்டில் சோதனை நடைபெற்றது. ஆனால், அங்கு எதுவும் சிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், போலீசார் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. ஏனென்றால், கொகைன் பயன்படுத்தியது முதல் 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்தை அதிரடியாகக் கைது செய்த போலீசார், 14ஆவது எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீகாந்தை ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.