யாழ். செம்மணி “அணையா தீபம்” போராட்டம் இன்று!
மக்கள் செயல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” மூன்று நாள் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் செயல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என மக்கள் செயல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
செம்மணி ‘அணையா தீபம்’ போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்றதே தவிர தீர்வுகள் எதுவும் கிடையாத போசுபொருளாகவே அது நீடித்துச்செல்கின்றது. அவ்வாறான நிலை இனியும் தொடரக் கூடாது. தமிழ் மக்கள் இழந்தவற்றையும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை நோக்கிய வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் ‘அணையா தீபம்’ போராட்டம் யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது பார்வைக்கு குறித்த பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.