விஜய் பிறந்தநாள் விழாவில் விபரீதம்.. சிதறிய பட்டாசுகள்.. நூலிழையில் தப்பிய தொண்டர்கள்!
பட்டாசு வெடித்து சிதறியதில், தவெக தொண்டர்கள் நூலிழையில் தப்பிய சம்பவம்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தவெக தலைவர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராதவிதமாகப் பட்டாசு வெடித்து சிதறியதில், தவெக தொண்டர்கள் நூலிழையில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜயின் 51-வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் வெகு சிறப்பாக கொண்டாடினர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ரத்த தானம் வழங்குதல், சிறப்பு பிரார்த்தனைகளை செய்தல், மக்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை விமரிசையாக செய்து வந்தனர். இதனால், பலதரப்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 22) இரவு நடைபெற்றது.
வார்டு செயலாளர் சத்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் தென்றல் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கு படிப்பு உபகரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, விஜய் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக கேக் வெட்டி, பொதுமக்களுக்குப் பிரியாணி வழங்கப்பட்டது.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் தென்றல் மணிகண்டனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால், தொண்டர் ஒருவர் பட்டாசை வெடிக்க வைக்கப் படாத பாடுபட்டார்.
நீண்ட நேரமாகியும் பட்டாசை வெடிக்க வைக்க இயலாத நிலையில், மற்றொரு தொண்டர் விரைந்து சென்று, பட்டாசில் தீயைப் பற்றவைத்தார். அப்போது, பற்றிக்கொண்ட பட்டாசு எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. அதனை சுதாரித்துக் கொண்ட தவெக தொண்டர்கள், அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். அதுமட்டுமின்றி, நலத்திட்ட உதவிகளை பெற அதிகப்படியான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.