பிணத்தை வைத்து ரூ.2 லட்சம் பேரம் - தனியார் மருத்துவமனை அட்டூழியம்; வாசலில் இறுதி சடங்கு நடத்திய உறவினர்கள்..!
பணம் செலுத்தவில்லை என்றால், அண்ணாதுரையின் உடலை ஒப்படைக்க மாட்டோம் என்று மருத்துவமனை நிர்வாகம்

இறந்தவர் உடலை பெற்றுக்கொள்ள ரூ.2 லட்சம் பேரம் பேசிய தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு, வாசலிலேயே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (56), அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அண்ணாதுரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உறவினர் சேர்த்துள்ளனர்.
அவரது நிலைமை மோசமாக இருந்ததால், சுமார் 14 நாள்கள் கழித்து மதுரையில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லுமாறு அரசு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து, மதுரை காளவாசல் அருகேயுள்ள, தனியார் மருத்துவமனையில் ஜுன் 12 (வியாழக்கிழமை) அன்று அண்ணாதுரை மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மருத்துவமனையில் சேர்த்த மறுநாள், அதாவது ஜூன் 13-ஆம் தேதியே அண்ணாதுரை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்யும்வரை, மருத்துவக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் செலுத்தியதாக அண்ணாதுரையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீதித் தொகையான ரூ.2 லட்சத்தை செலுத்திவிட்டு, அண்ணாதுரையின் உடலை பெற்றுக்கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணம் செலுத்தவில்லை என்றால், அண்ணாதுரையின் உடலை ஒப்படைக்க மாட்டோம் என்று மருத்துவமனை நிர்வாகம் கறாராக கூறவே, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்த அண்ணாதுரையின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்காத நிலையில், அவருக்கான இறுதிச்சடங்கை மருத்துவமனையின் வாசலிலேயே நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர். மேலும், மண் பானை, மலர் மாலைகள் வாங்கி வரப்பட்டு, மருத்துவமனையின் முகப்பு வாசலில் இறுதிச்சடங்கு செய்ய அண்ணாதுரையின் உறவினர்கள் ஆயத்தமாகினர். இதற்கு ஆதரவாக தமிழ் புலிகள் அமைப்பும் அண்ணாதுரையின் குடும்பத்தினருடன் உடனிருந்தது.
அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, போராட்டத்தை நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், உடலை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தால் மட்டுமே, இறுதிச்சடங்கு நிகழ்வுகள் கைவிடப்படும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.
தகவலறிந்த காளவாசல் காவல்துறையினர், மருத்துவமனை வந்து இருதரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியாக, மருத்துவமனை நிர்வாகம் அண்ணாதுரையின் உடலை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்ததோடு, பணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனவும் உறுதிமொழி அளித்தது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, அண்ணாதுரையின் உடல் இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
