ஈரான் அதிபருக்கு ஸ்கெட்ச் போட்ட இஸ்ரேல்..
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் முடிவுக்கு கொண்டு வந்தது போல இஸ்ரேல் - ஈரான் போரையும் தன்னால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டதாகவும், அதனை கடைசி நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்ததால் அந்த பயங்கர ப்ளான் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் மோதல், மிகப்பெரிய போராக மாறக்கூடும் என சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே சண்டை உக்கிரமடைந்து வருகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரானும், அந்நாட்டின் ஹிஸ்புல்லா படையினரும் களமிறங்கினர். இதனால் ஈரான் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த இஸ்ரேல், இரு தினங்களுக்கு முன்பு அந்நாட்டின் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் பொழிந்த குண்டு மழையில் ஈரானின் பல நகரங்கள் நிலைகுலைந்து போயின. இதில் ஈரானின் பல முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்தனர்.
ஆரம்பித்து வைத்த இஸ்ரேல்:
இதையடுத்து, யாருமே எதிர்பாராத வகையில், இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை முதல் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகள், இஸ்ரேலின் பல நகரங்களை துண்டாடின. பல கட்டடங்களும், வீடுகளும் தரைமட்டமாகின. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளும் தற்போது நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் விரைவில் மிகப்பெரிய விலையை கொடுக்கும் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நேற்று எச்சரித்திருந்தார்.
ஈரான் அதிபருக்கு ஸ்கெட்ச்:
இந்நிலையில்தான், அமெரிக்க உயரதிகாரி ஒருவர் மிகப்பெரிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது, ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனியை கொல்வதற்கான ரகசிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இஸ்ரேல் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை டிரம்ப் ஏற்க மறுத்ததால், அதனை இஸ்ரேல் கைவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நினைத்ததை முடிப்போம்'
இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து 'ஃபாக்ஸ்' தொலைக்காட்சி நிருபர், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத நெதன்யாகு, "நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்து விடுவோம் என நம்புகிறேன். அமெரிக்காவுக்கு எது நல்லது என்பது அமெரிக்காவுக்கு தெரியும்" என பதிலளித்துள்ளார்.
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதால், ஈரான் அதிபரையே கொலை செய்ய இஸ்ரேல் சதித்திட்டம் தீட்டிய விஷயம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மீண்டும் வாய்விட்ட டிரம்ப்!
இது ஒருபுறம் இருக்க, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் முடிவுக்கு கொண்டு வந்தது போல இஸ்ரேல் - ஈரான் போரையும் தன்னால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தியதற்கும், டிரம்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்தியா ஏற்கனவே தெளிவுப்படுத்திய நிலையில் டிரம்ப் இவ்வாறு மீண்டும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெளியாத பைத்தியமா? தெளிவான பைத்தியமா?