கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்.. கல்லூரி முதல்வர் கைது
கைது செய்யப்பட்ட அகமது அலி கோவை அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறார். ஜவகர் சாதிக் அரபிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் அரபிக் கல்லூரியின் முதல்வர் உட்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று (ஜூன் 18) கைது செய்தனர்.
கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டன. இதையடுத்து, ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டபோது காவல்துறையினர், சுமார் 75 கிலோ வெடி மருந்துகள், ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில், மேலும் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரையும் கைது செய்தனர். கார் வெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் நடத்திவந்த புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.
அந்த விசாரணையின் போது, அரபிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், ஜமீல் பாஷா, முகமது உசேன் இஸ்ரத், சையது அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக ஜவஹர் சாதிக், அகமது அலி ஆகிய இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள NIA அலுவலகத்தில் இந்த விசாரணையானது நடைபெற்று வந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அகமது அலி கோவை அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறார். ஜவகர் சாதிக் அரபிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரையும் இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள நிலையில் கைது எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்துச்சென்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.