பொள்ளாச்சியில் பூத்துக் குலுங்கிய இமயமலையின் அதிசயம்.. அது என்ன 'பிரம்ம கமலம்'?
3 ஆண்டுகளாக வளர்ந்து வரும் நிலையில் முதல் முறையாக நேற்றிரவு இந்த பூ மலந்தது.

அரிதான பூக்களுள் ஒன்றும், இமயமலையில் மட்டுமே பூக்கும் அபூர்வ வகை மலரான பிரம்ம கமலம் பூ, நேற்று தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செடியில் முதல் முறையாக பூத்துக் குலுங்கியது.
ஆண்டுக்கு ஒருமுறை இமயமலையில் அதுவும் இரவு மட்டும் மலரும் பிரம்ம கமலம் பூ நேற்று கோவை அருகே பொள்ளாச்சியில் பூத்துக் குலுங்கியது.
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை பூ, 'நிஷா கந்தி' என்று அழைக்கப்படும் பிரம்ம கமலம் பூ. இந்த பிரம்ம கமலம் பூக்கள் என்பது இமயமலை சாரல்களில் பனிப்படர்ந்த சூழலில் அதிகம் பூத்துக் குலுங்கும். பெரும்பாலும் கேதார்நாத், துங்கநாத், பத்ரிநாத் போன்ற சிவாலயங்களில் சிவனுக்கு மிகவும் உகந்த பூவாக இது கருதப்படுகிறது.
பொதுவாக, இந்த பிரம்ம கமலம் உயரமான இடங்களில் வளரும் தாவரமாகும். இந்தியாவில் உத்தரகண்ட் மற்றும் இமயமலைப் பகுதிகளில் அதிகமாக செழித்து வளந்து வருகின்றன. மேலும் நேபாளம், பூடான், பாகிஸ்தான் போன்ற பகுதிகளிலும் இந்த அழகிய பூக்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக மலர்கின்றனர்.
மேலும், இந்த பூ பிரம்மனுடைய நாபிக் கமலத்திலிருந்து உருவானது என நம்பிக்கை ஒன்று உள்ளது. ஏனென்றால், இந்தப் பூவின் உட்புறத்தில் பல நாகங்கள் உள்ளது போல இருப்பதனால், இதில் பிரம்மன் அமர்ந்திருப்பது போல காட்சி அளிக்கிறது. இந்த செடி கள்ளிச் செடி வகையைச் சேர்ந்த தாவரமாக கருதப்படுகிறது. ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடும். இந்த பூக்கள் 5 முதல் 10 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இந்த பூக்கள் தெய்வீக நறுமணம் கொண்டது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குமார் என்பவர் வீட்டில் இந்த பிரம்ம கமலம் செடியானது 3 ஆண்டுகளாக வளர்ந்து வரும் நிலையில் முதல் முறையாக நேற்றிரவு இந்த பூ மலந்தது. இரவில் மலர்ந்து, காலையில் உதிரும் இந்த பூவை, அப்பகுதிகள் மக்கள் ஆச்சியத்துடன் பார்த்து சென்றனர். சிலர் அந்த பூவை பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.