குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததில் ஒரே புள்ளியில் இணைந்த மூன்று அதிகாரிகள்…!
பாதாள உலகக் கோஷ்டியினர் கைதாகி பிணையில் விடுதலையானாலும் எவர் கண்ணுக்கும் தெரியாமல் அவர்கள் எங்ஙனம்மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர்!

பாதாள உலகக் கோஷ்டியினர் கைதாகி பிணையில் விடுதலையானாலும் எவர் கண்ணுக்கும் தெரியாமல் அவர்கள் எங்ஙனம் டுபாய், கட்டார் என்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர் என்ற கேள்வி பல தரப்பினருக்கும் எழுந்த போது எவரும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சந்தேகிக்கவில்லை. ஏனென்றால் திணைக்களமானது மிகவும் பொறுப்பு வாய்ந்த சேவையை நாட்டுக்கு வழங்கும் நிறுவனமாகும்.
பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் அல்லது தலைமறைவாகியிருக்கும் குற்றவாளிகளும் சந்தேக நபர்களும் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமலிருப்பதற்கு விமான நிலையத்தில் அவர்களை கண்காணித்து கைது செய்வதற்கு மேற்படி திணைக்களம் இருபத்து நான்கு மணி நேரமும் விழிப்பாக இருக்க வேண்டும்.
அதே போன்று வெளிநாட்டிலிருந்து எமது நாட்டுக்கு தப்பி வரும் குற்றவாளிகளின் கடவுச்சீட்டுகள் போலியானவையா அவர்கள் மீது சர்வதேச பொலிஸாரினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றனவா
, அவர்கள் கருப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனரா போன்ற தகவல்களை சரி பார்த்து பொலிஸாருக்கும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் தகவல்களை வழங்க வேண்டிய திணைக்களமே குடிவரவு குடியகல்வு துறையாகும்.
ஆனால் இவ்வாறு எமது நாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் இணைய வழி விசா மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வது கண்டறியப்பட்டவுடன் இந்த முறையை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் கடந்த வருடம் குடியகல்வு குடிவரவு திணைக்களத்துக்கு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.
ஆனால் அப்போதைய திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, உயர்நீதிமன்ற உத்தரவை துச்சமென மதித்து செயற்பட்டார்.
அதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே இவர் பல குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல உதவியவர் என்ற விவகாரம் அம்பலமானது.
அதையடுத்து அநுர குமார அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டவர் உயர் நீதிமன்றினால் கடமைகளை முன்னெடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன். பல குற்றச் சம்பவங்களின் பின்னணியாக செயற்பட்ட இவர்
கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகமவில் பகுதியில் பெலேன துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
குறித்த பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழு மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மரணமடைந்திருந்தார்.
அச்சந்தர்ப்பத்தில் தேசபந்து தென்னக்கோன் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்டார். இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டதாகவே இருந்தன. எனினும் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானவுடன் உடனடியாக இந்த விவகாரத்தை தூசு தட்டினார்.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக மாத்தறை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
அதற்கமைய, கொழும்பு குற்றப் பிரிவின் (CCD) முன்னாள் அதிகாரிகள் மற்றும் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பொலிஸ் அதிகாரிகளை சந்தேக நபர்களாகக் குறிப்பிட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், பல நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபரை கண்டுபிடிக்க CID குழுக்களால் முடியவில்லை.
அவரை முன்னாள் அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருந்தனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தேசபந்து தென்னக்கோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மார்ச் 17 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் தென்னக்கோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது. பலருக்கு கண்ணாமூச்சு விளையாட்டு காட்டி விட்டு அவரே நீதிமன்றில் முன்னிலையாகிய போது இவ்வருடம் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் இருக்கும் இடம் தெரிந்தும் கூட குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் அவரைத் தேடிப்பிடிப்பதில் அக்கறையின்றியே செயற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் பல பாதாள உலக கோஷ்டியினருடன் தேசபந்து தென்னக்கோன் தொடர்பை பேணி வந்தமை அம்பலமானது. அவர் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட போது யுக்திய நடவடிக்கைளின் போது சிறு சிறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களையே கைது செய்வதில் அவர் அக்கறை காட்டியிருந்தார்.
இதே வேளை குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவமாக சிறைச்சாலை ஆணையாளர்
நாயகம் துஷார உப்புல்தெனிய நாயகத்தின் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. . ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பொது மன்னிப்பு கைதிகளை தவிர்த்து மேலதிகமாக சிலரை பட்டியலில் சேர்த்து அவர்களும் விடுதலை செய்யப்பட இவர் காரணமாக இருந்திருக்கின்றார் என்பது குற்றச்சாட்டு.
இவரது பணிப்புரையின் பேரிலேயே அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த டபிள்யூ எச்.அத்துல திலக்கரட்ன என்பவர் வெறும் பத்து நாட்களில் சிறைவாசம் அனுபவித்து விட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரம் பூதகரமானதற்குக் காரணம் ஜனாதிபதி அநுரவும் அநுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். ஜனாதிபதியானவர் தனது பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குகிறார் என்ற விமர்சனத்துடனேயே இந்த விவகாரம் ஆரம்பத்தில் வெளிக்கிளம்பியது.
எவ்வாறு இருப்பினும் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதிலும் அவர்களை பாதுகாப்பதிலும் குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர்,
பொலிஸ் மா அதிபர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் மூவருமே ஒரே புள்ளியில் காய்களை நகர்த்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது. ஆனால், இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டமையின் பின்னணியில் அரசியல்வாதிகள் பலர் இருப்பதை மறுக்க முடியாது.
பல சட்டவிரோத காரியங்களுக்காக பாதாள உலக கோஷ்டியினருடன் தொடர்பை பேணி வந்த அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அவர்களே இவர்களை பயன்படுத்தியிருக்கலாம் என்பது வெள்ளிடை மலை. அநுர அரசாங்கமானது தொடர்ந்தும் இவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் பல உண்மைகள் அம்பலமாகலாம்.
சி.சி.என்