வெளிநாட்டு உதவிகளில் நாம் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது.
சந்ததிகள் மாறும்போது இந்த உதவிகள் எதிர்காலத்தில் நின்றுபோகக் கூடும். எனவே நாம் எமது சொந்தக் காலில் நிற்கவேண்டும்.

வெளிநாட்டு உதவிகளில் நாம் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது. வெளிநாட்டிலுள்ள அடுத்த தலைமுறைகள் - சந்ததிகள் மாறும்போது இந்த உதவிகள் எதிர்காலத்தில் நின்றுபோகக் கூடும். எனவே நாம் எமது சொந்தக் காலில் நிற்கவேண்டும். அது இந்தச் சிறுவர் இல்லத்துக்கு மாத்திரமல்ல எமது சமூகத்துக்கும் பொருந்தும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 4ஆவது ஆண்டாகவும் இல்ல மைதானத்தில் இன்று சனிக்கிழமை (14) கிளிநொச்சி மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் - பதில், சமுர்த்திப் பணிப்பாளரும் இல்லத் தலைவருமான ச.மோகனபவன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் இருந்த காலத்தில் இந்த இல்லத்துக்கு வந்திருக்கின்றேன். இன்று 16 ஆண்டுகளின் பின்னர் வருவதையிட்டு மகிழ்வடைகின்றேன்.
இன்றைய எமது சமூகச்சூழல் மாற்றமடைந்து செல்கின்றது. பல குடும்பப் பிரச்சினைகள் தோற்றம்பெறுகின்றன. எனவே அந்தப் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான சிறுவர் இல்லங்கள் அவசியமாகின்றன. பிள்ளைகளுக்கு வீடுகளே சிறந்த பாதுகாப்பு என்றபோதும், அந்த வாய்ப்புக்கிடைக்காத பிள்ளைகளுக்கு இவ்வாறான இல்லங்களே அரணாக அமைகின்றன.
இன்று மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றமையால் பல பாடசாலைகள் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு 200 இற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கின்றார்கள். இதுவும் ஒரு பாடசாலைதான். சிறுவர் இல்லம் ஒன்று நடத்தும் விளையாட்டுப்போட்டியை இப்போதுதான் நான் முதன்முதலில் காண்கின்றேன். இது மிகச் சிறந்த முன்னுதாரணம்.
சிறுவர்களுக்கு பொழுதுபோக்குக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் திசைமாறாமல் இருப்பதற்கு விளையாட்டு அல்லது கலை ஊடாக அதை வழங்கவேண்டும். இந்தச் சிறுவர் இல்லம் விளையாட்டுப்போட்டியையே நடத்தியிருக்கின்றது. இந்த விளையாட்டுப்போட்டியைப் பார்க்கும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி உற்சாகமாக பங்குபற்றினீர்கள் என்பதைக் கண்டுகொண்டேன். இந்தச் செயற்பாட்டை ஏனைய இடங்களிலும் முன்னெடுக்கவேண்டும்.
இதேவேளை, வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர் அவர்கள், சிறுவர் இல்லச் சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை – என்.வி.க்யூ. சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கவிருக்கின்றார். இதன்மூலம் சிறுவர் இல்லத்திலிருந்து சிறுவர்கள் சமூகத்துக்குச் செல்லும்போது அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க முடியும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மரத்தினம், ஆசிரிய கல்வியலாளர் தி.சிவரூபன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.