மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்!
நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கீட்டிற்கு அரசாங்கம் தீர்வை காணவேண்டும்!

மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் என இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மீதான உரையாடலிற்காக இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இங்கிலாந்தின் மனித உரிமைகளிற்கான தூதுவர் எலினோர் சான்டெர்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது=
இலங்கை குறித்த உங்கள் அலுவலகத்தின் பணிகள் குறித்து நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.
இலங்கையில் மேமாதம் தேர்தல்கள் நடாத்தப்பட்டதை நாங்கள் வரவேற்பதுடன்,2009ம் ஆண்டு ஆயுதமோதலின் போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவது இம்முறை அமைதியான விதத்தில் இடம்பெற்றதை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். அதேவேளை மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.
நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கீட்டிற்கு அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் மேலும் ஊடகவியலாளர்கள்,மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் சமூகத்தினர் சுதந்திரமாக பாதுகாப்பாக செயற்படகூடிய நிலையை ஏற்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பி;க்கையை பெறுவது மிகவும் முக்கியமானது.
அரசாங்கம் பயங்கரவாத தடைச்;சட்டத்தை நீக்குவதே தனது நிலைப்பாடு என தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனைகொண்டுள்ளோம்.
மேலும் காணாமல்போனோர் அலுவலகத்தை மீண்டும் வலுப்படுத்துவதன் மூலம் பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்க்கப்படாத விடயங்களை தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.