கதிர்காம பாத யாத்திரைக்காக குமண நுழைவாயில் இன்று திறப்பு
.

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத் திருவிழா ஜூன் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கதிர்காம பாத யாத்திரை பருவத்திற்கான ஆயத்தமாக, யால தேசிய பூங்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குமண நுழைவாயில் இன்று (20) திறக்கப்பட உள்ளது.
பக்தர்கள் கதிர்காமத்தை அடைய குமண மற்றும் யால தேசிய பூங்காக்களுக்கு இடையில் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் வனவிலங்குகள் வசிக்கும் பகுதிகள் வழியாக 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கின்றனர்.
உகந்தையில் இருந்து யால வழியாக கதிர்காமம் வரையிலான யாத்திரையை எளிதாக்கும் வகையில் குமண நுழைவாயில் இரண்டு வாரங்களுக்கு திறந்திருக்கும் என்று தேசிய பூங்காவின் அதிகாரி தெரிவித்தார்.
கதிர்காம பாத யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்பொருளாக்களை எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறும் சுற்றாடல் அமைச்சர் வைத்திய தம்மிக பட்டபெந்தி பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.