அதிமுகவுடன் சேர்வதில் எனக்கு பிரச்சினை இல்லை.. ஓபனாக பேசிய திருமாவளவன்
அதிமுகவுடனான கூட்டணி குறித்தும், திமுகவுடனான கருத்து வேறுபாடுகள் குறித்தும் திருமாவளவன் பேசியுள்ளார்.

அதிமுகவுடன் சேர்வதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் முடக்கத்தான் பகுதி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வில், அக்ககட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அரசியல் கட்சிகளின் கொடிகள் அகற்றப்படுகின்றன. அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் அல்வா சாப்பிட்டது போல முதலில் விசிக கட்சி கொடியைத்தான் அகற்றுகிறார்கள். அரியலூர், கடலூர், பெரம்பலூர் என எல்லா மாவட்டங்களிலும் விசிக கொடியைத்தான் அகற்றி வருகின்றனர்.
ஆளுங்கட்சியோடு நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் எங்களது கட்சிக் கொடியை அகற்றி வருகின்றனர். இத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொண்டு சமாளித்து, போராடிக் கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில்தான் நீடிக்கிறோம்.
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என கேட்பது சராசரி மனிதனின் புத்தி. ஆனால் அது அரசியலில் சரிவராது. அரசியலில் நாம் இருக்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டுதான் பிற கட்சிகளுடன் கூட்டணியில் இருக்க வேண்டும். ஒரு பிரச்சினையை மட்டுமே கவனத்தில் கொண்டு நாம் செயல்பட முடியாது. அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம் தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார், நமக்கு எதிரான சக்திகள் யார் என்பதை தெளிவாக முடிவுசெய்ய வேண்டும்.
அதனால்தான் பாஜக, பாமக கட்சிகள் இடம்பெறும் அணிகளில் நாம் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம். அதிமுகவோடு சேர்வீர்களா என்றால் சேரலாம். பிரச்சினை இல்லை. ஆனால் அதிமுக பாஜகவோடு இருப்பதால் அது முடியாது. மிரட்டி அரசியல் செய்யும் தேவை, விசிகவுக்கு இல்லை என பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தவெக கட்சியுடன் விசிக கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கு சாத்தியமே இல்லை என்று தெளிவுபடுத்திய விசிக தலைவர் திருமாவளவன், அதன்பிறகு பல மேடைகளில் விஜயின் அரசியல் குறித்து கடுமையாகவே விமர்சித்து வருகிறார். அதேநேரத்தில், தாங்கள் கூட்டணி வைத்திருக்கும் ஆளுங்கட்சியுடனும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அவர் கூறியிருக்கும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் விசிகவுக்கு பிரச்சினையில்லை என்று அவர் பேசியிருப்பது பலரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.