இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியும்- இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் தகவல்!
.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் இருந்து நேற்றைய தினம் (19) நான்கு நபர்கள் இலங்கைக்கு புறப்பட தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இஸ்ரேலில் இன்றும் (20), நாளையும் (21) விடுமுறை தினங்களாக உள்ள போதும் தூதரகம் திறந்திருக்கும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
ஜூன் 14ஆம் திகதி போர் தொடங்கிய பின்னர் ஒருவரின் விசா காலாவதியாகியிருந்தால், சர்வதேச விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும்போது, விமான நிறுவனங்களால் அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசா காலாவதியாகிவிட்டாலும், அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க டிக்கெட்டுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் நாட்டிற்கு திரும்பி வர முஐடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மேலும் பல இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அனுமதி கடிதங்கள் தேவைப்படும் இலங்கையர்கள் தங்கள் கடவுச்சீட்டு மற்றும் விசாக்களுடன் தூதரகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு எகிப்து வழியாக பயணிக்க 96 நாள் விசா வழங்கப்படும் என்றும் இதற்காக 50 அமெரிக்க டொலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.