ஷூட்டிங் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமான விபத்து குறித்து கேள்வி.. சட்டென மாறிய முகம்!
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தத்திற்குரியது என்றும், ஆண்டவன் அருளால் இனி இது போன்ற எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அகமதாபாத் விமான விபத்து போல இனி எந்த ஒரு விபத்தும் நடக்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம், மருத்துவ மாணவர் விடுதி கட்டடத்தில் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட கோர விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் கடைசி நேரத்தில் விமானத்தில் இருந்து தரையில் குதித்து உயிர் தப்பினார். இது தவிர, கட்டடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்திற்கு கவலை தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இனி இது போன்ற எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பெங்களூரூவில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூன் 17) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ''ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு தான் தற்போது நான் பெங்களூரு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறேன். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும். அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தத்திற்குரியது. ஆண்டவன் அருளால் இனி இது போன்ற எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என நான் வேண்டிக் கொள்கிறேன்'' என்றார்.