இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா “மதில் மேல் பூனை”
இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் நடந்தபின் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் “இந்த சம்பவம் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆழமான அக்கறையை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு.
ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான வழியில், ஓர் அரசியல் தீர்வை நோக்கிய வழியில் உடனடியான போர்நிறுத்தம் பற்றி வெளிப்படையாக பேசுகின்றன. பல காலமாக இஸ்ரேலுக்கு விளக்குப் பிடித்து மீண்டுவந்த சவூதி கூட, ஈரான் மீதான இஸ்ரேலின் வலிந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆனால் இந்தியா..?
எஸ்.சி.ஓ (SCO- Shanghai Cooperation Organisation) இன் ஓர் அங்கத்துவ நாடாகவும் இந்தியா இருக்கிறது. 2001 இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், பெலாரூஸ், கஸஹஸ்தான், கிர்ஹிஸ்தான் உற்ஸ்பெஹிஸ்தான் இருந்தன. 2003 இல் இந்தியாவின் அனுசரணையின் கீழ் ஈரானும் இணைந்துகொண்டது.
இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தியா இணைந்து கொள்ள மறுத்துள்ளது. ஈரான் மீதான வலிந்த தாக்குதலை இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஈரானின் இறைமைக்கு எதிராக இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அது சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு இந் நடவடிக்கை பிராந்திய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. இதில் இந்தியாவின் குரல் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது.
2024 இல் இருமுறை வலிந்த தாக்குதலை இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டது. ஈரானும் எதிர்த் தாக்குதல் செய்தது. ஆனால் இம் முறை நடந்த தாக்குதல் இன்னும் வீரியமான விளைவுகளை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலில் (இதுவரையான கணக்கின்படி) 70 க்கு மேற்பட்ட மக்களை மட்டுமல்ல, அணு விஞ்ஞானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உயர்நிலை இராணுவ அதிகாரிகள் என்பவர்களும் இவ் எதிர்பாராத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு நாட்டின் இறைமையை மோசமாக மீறிய செயலாகும்.
அத்தோடு பேரழிவை ஏற்படுத்தவல்ல அணுச் சக்தி நிலையங்கள் மீதும் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. ஒன்று புரியவில்லை. இன்று அணுவாயுதங்களை வைத்திருக்கிற இஸ்ரேல் உட்பட்ட நாடுகள் யாரிடம் அனுமதி வாங்கி அதை சாதித்தன. பெருமை வேறு கொண்டாடின. ஈரானுக்கு மட்டும் அதை மறுக்க அமெரிக்காவோ இஸ்ரேலோ யார்?.
உண்மையில் சிறிய நாடுகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு அணுகுண்டு ஒருவகையில் பாதுகாப்பு அளிக்க வல்லது என்ற கருத்து ஒன்று உண்டு. அது ஏவியவர் உட்பட மனித குலத்தையே அழிவுக்கு உள்ளாக்கும் வலு கொண்டது. அதனால் அதை எடுத்த எடுப்பிலே பாவிக்க முடியாதபடியான அதி எச்சரிக்கைத் தன்மையையும் அந்த வலு உள்ளடக்கியுள்ளது எனலாம்.
தாம் அணுகுண்டை தயாரிக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை என்கிறது ஈரான். அது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் அணுவாயுத செயல்முறை அச்சுறுத்தலை தரலாம் என நியாயப் பூழல் சொல்லி ஈரானை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதுவரை 5 தடவைகள் பேசியுமாயிற்று. முன்னேற்றகரமாக இருக்கிறது என இரு தரப்பும் பேசிக்கொண்டிருக்க இஸ்ரேல் ஈரானுக்குள் நுழைந்து வெறியாட்டம் ஆடுகிறது. இதெல்லாம் பெரியண்ணனுக்கு தெரியாமலா நடக்கும் என்பதை ஊகிக்க கடினமேதுமில்லை.
இந்தத் தாக்குதலுக்கான இரகசிய ட்றோன் மறைவிடத்தை மொசாட் ஈரானுக்குள்ளேயே நிறுவி பதுங்கியிருந்ததானது ஈரானின் பாதுகாப்பு கவசத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. மொசாட் செய்திருக்கிற இந்த சதியில் இதுவரை ஈரானால் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது இன்னொரு பக்கத்தில் அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் றோ சம்பந்தப்பட்டதா என்பது தெரியாது.
காஸா படுகொலை நடந்து கொண்டிருக்கிறபோது கூட, மோடி அரசு இஸ்ரேலுக்கு தமது ஆயுத விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டுக் கொலை, பட்டினிக் கொலை என்பவற்றின் மீதான மனிதாபிமானத்தையும், இனப்படுகொலையையும் கோடிப்புறத்துள் ஒளித்துவைத்து நடத்தும் இராசதந்திரம் ஜனநாயக அரசு எனப்படுகிற ஒரு நாட்டின் அசிங்கத்தையே வெளிப்படுத்தக் கூடியது.
இந்த இஸ்ரேல்-ஈரான் திடீர் யுத்தம் குறித்து அவசரமாகக் கூடிய ஐநா பொதுச்சபையில் உடனடியானதும் நிபந்தனை ஏதுமற்றதுமான நிரந்தரமான போர் நிறுத்தம் குறித்த வரைவின் மீது நடந்த வாக்கெடுப்பிலும் இந்தியா நடுநிலை வகித்து வாக்களிக்கவில்லை. இரு தரப்பும் போர்நிறுத்தம் செய்யக் கேட்பதில்கூட என்ன நடுநிலை வேண்டிக் கிடக்கிறதோ தெரியவில்லை. இக் கூட்டத்தில் ரசியா சீனா உட்பட பல நாடுகள் கறாராக தமது கருத்துகளை முன்வைத்து விவாதித்தன.
இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் நடந்தபின் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் “இந்த சம்பவம் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆழமான அக்கறையை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். கழுவுற சட்டியில் நழுவி ஓடும் மீனாக இந்த வார்த்தைகள் நெளிகின்றன. அத்தோடு, இந்த பதட்டநிலையை தவிர்க்க அவசரமாக வேண்டுகோள் விடுப்பதாகவும், விரைந்த இராசதந்திர நகர்வை எடுக்கும் படியும் கோரியிருந்தார். இவையெல்லாம் அவர் ஈரானுடன் தொலைபேசிவழி ஓடவிட்ட வார்த்தைகள். இதைத்தானே ஐநாவும் வரைபாய் முன்வைத்து வாக்கெடுப்புக்கு விட்டது. ஏன்தான் வாக்களிக்காமல் நழுவியது இந்தியா?
அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் இந்த வருடம் இந்தியா வந்திருந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டார். இந்தியாவை பல பரிமாணங்களிலும் ஏற்று, விதந்துரைத்த அவர், “ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். சீனாவுடனான முரண்பாட்டை அமைதியாக இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து அமெரிக்காவின் விளையாட்டை நீங்கள் விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (Don’t play American’s game). இதைச் சொல்வதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்” என்றார்.
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் கடற்படைப் போருக்குச் சாதகமாகவும் அந்த சீனக் கடற் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்ட QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதே அவரது தூர நோக்காகும். நான் விரும்பிப் பார்க்கும் பிரபல இந்திய செய்தியாளர் பல்கி சர்மா உடனான நேர்காணல் அது. மேற்குலகு குறித்து மிகக் கூர்மையாக செய்தியிடும் பல்கி சர்மா, அதற்கு மாறாக ஸக்ஸ் வெளிப்படுத்திக் காட்டும் கூற்றினுள் அமெரிக்க நுண்ணரசியலை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிய மறுத்து “சீனாவுடனான முரண்பாட்டை நாம் (இந்தியா) எமது பாணியில் சந்திப்போம்” என பதிலளித்திருந்தார்.
அவர்கூட அண்மையில் தனது F. செய்தித் தளத்தில் “இந்த யுத்தத்தில் இந்தியா தனது நடுநிலையை எவளவு தூரத்துக்கு தக்கவைக்கும் என்பது கேள்வி” என்றார். இந்த உண்மையை மோடி அரசு எப்போ புரிந்துகொள்ளப் போகிறது.
அமெரிக்காவின் எதிரியாக இருப்பதைவிட பேரழிவு தரக்கூடியது அமெரிக்காவின் நண்பனாக இருப்பது என கென்றி கிஸிங்கர் சொன்னதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லா பிரச்சினைகளிலும் நடுநிலை என்பது ஓர் இராஜதந்திர அணுகுமுறை அல்ல. கோட்பாட்டு ரீதியில் ‘நடுநிலை’ என்பது ஒடுக்குபவர்களின் பக்கம் சாய்ந்து நிற்பதுதான்.
எங்கள் வீட்டு வாசல்படி வரை ஆபத்து வந்தபின் கத்திக் குளறி பிரயோசனமில்லை. யாரும் கண்டுகொள்ள மாட்டார். இதை அனுபவப்பட்டு உணரவேண்டும் என்பதில்லை. மோடி அரசு புரியாமலிருக்கலாம். ஆனால், விமர்சனங்களைக் கொண்டிருக்கிற போதும், பூகோள அரசியலில் நழுவல் போக்கு இன்றி நேரு, இந்திராகாந்தி போன்ற கறாரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி நின்ற தலைவர்களைக் கண்ட இந்திய நாடும், -பார்ப்பனிய சிந்தனைக்கு வெளியில்- சிந்திக்கக் கூடிய இந்திய மக்களும் புரியாத விடயமல்ல,