ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் 11 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு முயற்சிப்பதாக எழுந்த அச்சம்!

ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் 11 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், லெபனான், ஈராக், கட்டார், குவைத், சவுதி அரேபியா, ஜோர்தான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
இதனால், தோஹா, அபுதாபி, குவைத், டுபாய் நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்குச் செல்லும் 5 விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்திலிருந்து கட்டார் தலைநகர் தோஹா சென்ற 3 கட்டார் எயார்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
இதேவேளை இந்தியாவில் இன்று லண்டன், பஹ்ரைன், அபுதாபி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, எரிபொருள் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.69 அமெரிக்க டொலர்கள் (3.76%) குறைந்து 68.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது ஜூன் 11, 2025க்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த விலையாகும்.
இதற்கு முன்னதாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு முயற்சிப்பதாக எழுந்த அச்சத்தால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, நேற்று (23) உலகளாவிய எரிபொருள் விலைகள் 3% உயர்ந்து, ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 79 டொலர்களாக காணப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பான நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து எண்ணெய் மாதிரிகளை பரிசோதிக்கவும் CPC திட்டமிட்டுள்ளது.
இந்த உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின் தாக்கம் வரவிருக்கும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உணரப்படலாம் என்று CPC தெரிவித்துள்ளது.